மண நிகழ்ச்சிகள் பலவகைப்படும். கண்ணகி கோவலன் மணம், தாலிகட்டுதல் என்ற சடங்கின்றி நடை பெற்றதென்று சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது. மங்கல வாழ்த்துப் பாடல்கள் பாடியவுடன் திருமண நிகழ்ச்சி முடிவடைகிறது. கேரளத்தில் பல ஜாதியினரிடையே தாலிகட்டும் வழக்கம் இல்லை. கல்யாணச் சடங்கே மிகவும் முக்கியமானது என்பதை “சந்தடியில் தாலி கட்ட மறந்த கதை” என்ற பழமொழி தெளிவாக்குகிறது. சில சாதியாரிடையே மணமகள் கழுத்தில் மணமகனே தலி கட்டி ஒரு முடிச்சுப் போட்டபின் அவனது சகோதரிகள் மேல் முடிச்சுகள் போடுவார்கள். சேலம் மாவட்டத்தில் சில பகுதியில் சுமார் 30 வருஷங்களுக்குமுன் மணமகளுக்கு மணமகன் தாலி கட்டுவதி்ல்லை. ஜாதியில் வயது முதிர்ந்தவர்தான் மணமகள் கழுத்தில் தாலியைக் கட்டுவார். ஆனால் தற்பொழுது முறை மாறி விட்டது. வயது முதிர்ந்தவர் தாலியைத் தொட்டுக் கொடுக்க, மணமகன் வாங்கி மணமகள் கழுத்தில் கட்டுவான்.

தென்தமிழ் நாட்டில் மங்கல வாழ்த்தைப் பெண்களே பாடுவார்கள். சேலம் பகுதியில் ஊர் நாவிதன் தன்னைக் கம்பன் பரம்பரையினன் என்று பெருமையாகச் சொல்லிக் கொண்டு மங்கல வாழ்த்துப் பாடுவான்.

மங்கல வாழ்த்து
(திருநெல்வேலி மாவட்டம்)

வாழ்த்துங்கள் வாழ்த்துக்கள்
வாள் விசய மைந்தருக்கு
கேளுங்கள் கேளுங்கள்
எல்லோரும் கேளுங்கள்
கோல வர்ணப் பந்தலிலே
கூறுகிறேன் கேளுங்கள்
சொர்ண மணிப் பந்தலிலே
சொல்லுகிறேன் கேளுங்கள்
இந்தச் சபை தன்னிலே
எல்லோரும் கேளுங்கள்

எங்கள் குடி தழைக்க
இளவரசு வேணுமென்று
அரசுமுதல் வேண்டுமென்று
அன்னை தவஞ் செய்து
பிள்ளை முதல் வேண்டுமென்று
பெரிய தவஞ் செய்து