ஊர்களில் போட்டி

சூரங்குடியும், தங்கம்மாள்புரமும் அருகருகே உள்ள ஊர்கள். தங்கம்மாள்புரத்தார் தன் ஊர் பெருமையை சூரங்குடியாரிடம் சொல்லுகிறார்கள். அவர்கள் உடனே வேடிக்கையாக தங்கம்மாள்புரத்தை தாழ்த்தி தம் ஊரை உயர்த்திப் பாடுகின்றனர்.

தங்கம்மாள்புரத்தார்--

ஊறி ஊறித் தண்ணி யெடுக்கும்
ஊத்தப் பய சூரங்குடி
பாடிப் பாடித் தண்ணி யெடுக்கும்
பாண்டிய ராசா தங்கம்மாள்புரம்.

சூரன்குடியார்--

தட்டாம் பயிறவிக்கும்
தட்டுக் கெட்ட தங்கம்மாள்புரம்
மொச்சைப் பயிறவிக்கும்
முதலாளி சூரங்குடி.

குறிப்பு: மொச்சைப் பயிர், இழவுக்கு அவிப்பார்கள்.


சேகரித்தவர் :
S.S.போத்தையா

இடம் :
நெல்லை மாவட்டம்.

கீழ் வரும் பாடல்கள் பாதியாகப்பட்டன. அவற்றின் முடிவு அனுமானித்து எழுதப்பட்டது.

முட்டியிலே சோறு பொங்கி
மூடி வைக்கும் சூரங்குடி
தவலையிலே சோறு பொங்கி
தானமிடும் தங்கம்மாள்புரம்
குத்துக் கல்லு மேலிருந்து
குசும்பிழுக்கும் சூரங்குடி
வைரக் கல்லு மேலிருந்து
வழக்கு தீர்க்கும் தங்கம்மாள்புரம்