கள்ளப் பையன் யாரடா?

முறைப்பெண், மாப்பிள்ளைகள் பாடும் பாட்டை முறை வாதம் என்றும் முறைப்பாட்டு என்றும் அழைப்பார்கள். நெல்லை மாவட்டத்தில் வழங்கும் சில முறைப்பாட்டுகளை முன்னர் கண்டோம். இப்பாடல் சேலம் மாவட்டத்தில் வழங்குவது. தமிழ் நாடு முழுவதும் இவ்வகைப் பாடல்கள் வழங்குகின்றன.

பெண் : ஒரு மூசி பூப்பறிச்சு
நாங்களெப்படி சோடிச்சோம்?
நாங்கள் அப்படி சோடிச்ச பூ
நாத்தி எப்படி சோடிப்பா
நாத்தி அப்படி சோடிச்ச பூ
கரையோரம் போனதா?
கரையோரம் போன பூவு
கத்திரி பித்திரி ஆனதா?
கத்தரிக்காய் அறுக்க வந்த
கள்ளப் பையன் யாரடா?
ஆண் : நான் தாண்டி உம் புருஷன்
வழி பார்க்க வந்தண்டி
பெண் : வழிபார்க்க வந்தாயா-சாமி
வளஞ்சி கும்பிட வந்தாயா
ஊராரைத் தண்டனிட்டு உழுந்து
கும்பிட வந்தாயா
நாட்டாரைத் தண்டனிட்டு
நடுங்கிக் கும்பிட வந்தாயா

 

வட்டார வழக்கு: சோடித்தல்-கோர்த்து மாலையாக்குதல்; உழுந்து-விழுந்து.


சேகரித்தவர்:
s.s. சடையப்பன்

இடம்:
சக்கிலிப்பட்டி,
தருமபுரி மாவட்டம்.