கதிரறுப்பு

அறுவடைக்குக் கூட்டம் கூட்டமாக உள்ளூர் வேலையாட்களும் வெளியூர் கூலியாட்களுமாக வருவார்கள். கதிரறுத்து, கட்டுக்கட்டி, களத்துக்கு தூக்கிச் சென்று, வட்டம் உதறி, புணையாலடித்து, மணி தூவி, நெல்லைக் குவியலாகக் குவிப்பார்கள். ஆண்களும் பெண்களும் பலவிதமான இவ்வேலைகளில் ஈடுபடுவார்கள். சோர்வு தோன்றும்போது அறுவடைப் பாடல்களைப் பாடுவார்கள். இப்பொழுது பாடல்கள் பாடுவது நின்று விட்டது.

இப் பாடல்களில் வேலையின் கடுமை தெரியாமல் இருப்பதற்காக காதல், இனிமை இவற்றைப் பற்றியே உழவர்களும் உழத்தியரும் பாடுவார்கள். இடையிடையே கலந்துவரும் தொடர்ச்சியான பொருள் வருமாறு பாடல்கள் அமைந்திரா.

அறுவடைப் பாடல்கள்

(பெண்)

கோடை கருதறுப் பே
கொடிக்காலே சூழ்ந்திருப்பே
நாளக் கருதறுப்பே
நானும் வந்தாலாகாதோ !

(ஆண்)

கஞ்சிக் கலயம் கொண்டு
கருதறுக்க போற புள்ளா
காக்காய் அலம்புதடி
கருத்தப் புள்ளா உங்கலயம்

(பெண்)

நெல்லுக் கதிரானேன்
நேத்தறுத்த தாளானேன்
நேத்து வந்த தோழனுக்கு
நேரம் தெரியாதோ !

(ஆண்)

கருதறுப்பில கங்காணத்திலே
கமகமங்குது குமுகுமுங்குது
கன்னத்து மஞ்சள் என்னைப்பகட்டுது
முன்னே போற பொண்ணே !
உன்னைத் தாண்டி பொண்ணே

(பெண்)

ஊரோரம் கதிரறுத்து
உரலுப் போல கட்டுக்கட்டி
தூக்கி விடும் கொத்தனாரே
தூரகளம் போய்ச்சேர
கருதறுத்துக் கிறுகிறுத்து
கண்ணு ரெண்டும் பஞ்சடைச்சி
தூக்கி விடும் கொத்தனாரே
தோப்புக் களம் போய்ச் சேர