மக்களும் இல்லையிண்ணு
மணம் வாடித் தவசிருந்தார்
பிள்ளைகளும் இல்லையிண்ணு
புழுங்கித் தவசிருந்தார்
சித்திர புத்திரரே-நல்ல
சிவனார் பெருங்கணக்கே
மானிடர் கணக்கை யெல்லாம்
வாசித்துச் சொல்லுமின்னம்
மண்டலத்தில் போய் பிறக்கும்
மானிடரைத் திட்டம் செய்தார்
மானிட ஜென்மம் வேண்டும்-இந்த
மண்டலத்து ஆசை வேண்டும்

கண்ணான கண்ணரையா
காசி விசுவநாதையா
வந்து பிறந்தாரையா
வயசு பத்து நூறு ஆக
மக்கள் பதினாறு பெத்து
மகிழ்ச்சியுடனாண்டிருந்தார்
பிள்ளை பதினாறு பெத்து
புகழுடனே ஆண்டிருந்தார்
ஆண்டு வரும் நாளையிலே-ஒரு
அதிசயமும் கண்டாராம்
தீர்த்த மாடப் போறாமிண்ணு
தெரிசனமும் கண்டாராம்
ராமேஸ்வரம் தீர்த்தமாடி
ராமநாதர் மோட்சம்தேடி
குற்றாலம் தீர்த்தமாடி
குழல்வாய்மொழி அடிபணிந்து
சங்குமுகம் தீர்த்தமாடி
சாலாட்சம்மா அடிபணிந்து
காசியிலே தீர்த்தமாடி
காசி நாதர் மோட்சம்தேடி
இத்தனையும் தீர்த்தமாடி
இளைத்து வந்து உட்கார்ந்தார்
அத்தனையும் தீர்த்தமாடி
அலுத்து வந்து உட்கார்ந்தார்
காலோ வலிக்குதிண்ணு
கட்டிலிலே போய்ப்படுத்தார்