இளராசா கைக்குழந்தை

சிறு குழந்தைகளை தாயின் பொறுப்பில் விட்டு விட்டு தந்தை இறந்துவிட்டான். அவன் மனைவியின் ஒப்பாரி இது. இதில் வரும் உவமைகள், குறிப்புகள் எல்லாம் பனை, பனையேறும் தொழில் முதலியவற்றைச் சார்ந்தனவாக இருக்கின்றன. எனவே இது நாடார் குலத்தினரின் ஒப்பாரியென்று தோன்றுகிறது.

பத்துப் பனையோலை
பாடும் குருத்தோலை
பாடி முடிக்கு முன்னே
பகவான் அழைச்சானோ?
சாஞ்ச பனையோரம்
சம்பா நெல் காயப்போட்டேன்
சம்பா நெல் அள்ளு முன்னே
சங்குச் சத்தம் கேட்டதென்ன?
தங்க தம்ளரிலே
தண்ணீரா கொண்டு வந்தேன்
தண்ணீரோ தேவையில்லை
தங்கரதம் தேவையாச்சே
தக்காளிப் பூப் பூக்கும்
தரம் தரமாய்க் காய்காய்க்கும்
தரங்கெட்டார் வாசலிலே
தள்ளிக்கொண்டார் மாலையிட்டார்
கோவை படர்ந்திருக்கும்
கொடி கொடியாய் காய்ச்சிருக்கும்
கொணங் கெட்டார் வாசலிலே
கூட்டிக் கொண்டார் மாலையிட்டார்
பாலுத்தி பாத்தி கட்டி
பாக்கு மரம் உண்டு பண்ணி
பாக்கு முத்தி தோப்பானோம்
பாலர் எல்லாம் கைக்குழந்தை
இஞ்சி வச்சா புஞ்சிறங்கும்
மணல் போட்டால் வேர் இறங்கும்
இஞ்சி முத்தித் தோப்பானோம்
இளராசா கைக்குலந்தை

குறிப்பு: தன் கணவன் வீட்டார் தன்னைக் கொடுமையாக நடத்தி வந்ததை ‘குணங்கெட்டார் வாசல்’, ‘தரங்கெட்டார் வாசல்’ என்ற சொற்றொடர்களால் குறிப்பிடுகிறாள் மனைவி. அவன் இறந்ததன் பின்னர் எப்படி அவர்கள் நடத்துவார்கள் என்பதை எண்ணி இரக்கம் கொண்டு அவள் அழுகிறாள்.

சேகரித்தவர் :
M.P.M. ராஜவேலு

இடம்:
தூத்துக்குடி வட்டாரம்,
நெல்லை மாவட்டம்.