|
கருமம் செய்ய
பிள்ளை இல்லை
குழந்தைப் பேற்றை விரும்பிய ஒரு பெண் பூஜை பல செய்கிறாள். குழந்தை
பிறக்கவில்லை. அவள் பூஜை செய்தும் குழுந்தை பிறக்காமல் இருந்ததை நினைத்து வேதனைப்பட்டுக்
கொண்டிருக்கும் நிலையில் அவள் கணவனும் இறந்து போகிறான். என்னதான் மற்றப் பிள்ளைகளைச்
சீராட்டினாலும் தாய் தந்தையர் இறந்த பின்பு தருமஞ் செய்யவும், கொள்ளி வைக்கவும் வயிற்றில்
பிறந்த மகன் தானே உரிமையுள்ளவனாகவும், அப்படிப் பெற்ற பிள்ளை கருமம் செய்வதற்குக்
கொடுத்து வைக்கும் பெற்றோர்கள், ஒரு குறைவும் இல்லாதவர்கள் என்று நம் சமூகம்
சொல்கிறது. கருமஞ் செய்யப் பிள்ளையில்லாதபடி கொடுத்து வைக்காதவராக ஆகி விட்டீர்களே,
ஆகி விட்டோமே என்பதை எண்ணி ஏங்குகிறாள் புருஷனை இழந்த ஒரு பெண்.
ஆத்துக் கந்தாண்ட
அன்னலறி
பின்னமரம்
அரும் பெடுத்துப் பூசை
செய்தும்
அருங்
கொளந்தைப் பஞ்சமாச்சி.
கொளத்துக்கு
அந்தாண்ட
கொழுந்து
வரி பின்னமரம்
கொழுந் தெடுத்துப் பூசை செய்தும்
கொளந்தைப் புள்ளை
பஞ்சமாச்சி
கணுங்காலு
தண்ணியிலே
காசு நிறைஞ்சிருக்கும்
காசெடுக்கப்
பிள்ளையுண்டு-எனக்கு
கருமஞ் செய்ய பிள்ளையில்லை
முழங் கால்
தண்ணியிலே
முத்து நிறைஞ்சிருக்கும்
முத்தெடுக்கப்
பிள்ளையுண்டு-எனக்கு
முன்னே செல்லப் பிள்ளையில்லே
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,
தருமபுரி மாவட்டம். |
|