பக்கம் எண்: - 100 -

திருமந்திரம்

திருமூலர் மூவாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். திருமந்திரம் என்பது அவருடைய நூல். பெயருக்கு ஏற்றபடி மந்திரம்போல் சுருங்கிய சொற்களில் ஆழ்ந்த பொருள் திட்பமாக அமைந்த பாடல்களும், மறைந்த நுட்பமான பொருள் உடைய பாடல்களும் திருமந்திரத்தில் உள்ளன. தத்துவக் கருத்துகள்முதல், யோகநெறி சித்த வைத்தியக் கருத்துகள்வரையில் பலவும் செறிந்த நூல் அது. பக்தியின் சிறப்பை அறிவுறுத்துமிடத்தில், அவர், “அன்பு சிவம் என்பவை இரண்டு பொருள் அல்ல, அன்பே சிவம் என்பதை உணர்ந்தவர் சிலரே. அவர்களே ஞானிகள்; அவர்களே கடவுள் தன்மை பெற்றவர்கள்” என்கிறார்:

அன்பு சிவம் இரண்டுஎன்பர் அறிவிலார்
அன்பே சிவமானது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே.

“எலும்பை விறகு ஆக்கித் தசைகளை அறுத்து நெருப்பில் இட்டுப் பொன்போல் பொரியும்படியாக வறுத்தாலும் பயன் இல்லை. அன்போடு உருகி மனம் குழைவார் அல்லாமல் மற்றவர்கள் கடவுளை அடையமுடியாது.”

என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம்குழை வார்க்கன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாேத.

கடவுளிடம் செலுத்தும் அன்பைமட்டும் அல்லாமல் மக்களுக்குத் தொண்டு செய்யும் அன்பையும் அவர் வற்புறுத்தியிருக்கிறார். “கோயிலில் படமாக உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால் நடமாடும் கோயில்களாக உள்ள உயிர்களிடத்தில் உள்ள கடவுளுக்கு அது பயன்படுவதில்லை. நடமாடும் உயிர்களிடத்தில் உள்ள கடவுளுக்கு ஒன்று தந்தால், படமாக உள்ள கடவுளுக்கும் அது சென்று சேரும்.”

படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவதற்குஅது ஆமே.

எல்லோரும் வெளியே பார்வையைச் செலுத்துகிறார்கள். உள்ளே பார்வையைச் செலுத்தி மனத்தை ஆராய்கிறவர்கள் சிலரே. அப்படி உள்