கவைத்திருக்க வேண்டுமென்று சென்ற நூற்றாண்டிலேயே மாக்கசு முல்லர் (maxmuller) திட்டமாய்க் கூறிவிட்டார். அம் மூலத்திற்குத் திரவிடம் மிக நெருங்கியதென்று கால்டுவெல் கூறியுள்ளனர். இக்கூற்றை என்னா லியன்றவரை முயன்று மெய்ப்பித்திருக்கிறேன்.

இந்நூல் திராவிடம், துரேனியம், ஆரியம், சேமியம், ஆசுத்திரேலிய ஆப்பிரிக்க அமெரிக்க முதுமொழிகள் என ஐந்து மடலங்களாகத் தொடர்வது; அவற்றுள், இப்பொத்தகம் முதல் மடல முதற்பாகம், தமிழைப்பற்றிக் கூறுவது. இரண்டாம் பாகம் பிற திராவிட மொழிகளைப்பற்றிக் கூறும். இவை தமிழில் வெளிவந்தபின் ஆங்கிலத்திலும் வெளிவரும்.

தமிழ்நாட்டில், பல நூற்றாண்டுகளாகப் பல தமிழ்ப் பகைவர் பலவாறு தமிழைக் கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்பதனால், அவற்றை எடுத்துச் சொல்வது இந்நூன்முடிபுக்கு இன்றியமையாததாயிருக்கின்றது. ஆகையால், அறிஞர் அதனை அருள்கூர்ந்து பொறுத்தருள்வாராக. யான் ஏதும் பிழை செய்திருப்பின், அதையும் எடுத்துக்கூறி என்னைத் திருத்துவதும் அவர் கடன்.

மொழிநூற் பயிற்சிக்கு வேண்டிய பொருள், இடம், காலம், துணை முதலிய ஏந்துகள் (வசதிகள்) எனக்கு மிகமிகக் குறைந்துள்ளன. ஆயினும், இந்நூல் இவ்வளவு உருப்பெற்றது இறைவன் திருவருளே.

என் கட்டுரைகளைக் குறைகூறி, என் முடிபுகள் முன்னிலும் வலிபெறுமாறு செய்த, பல நண்பர்கட்கும் யான் மிகவுங் கடப்பாடுடையேன்.

  குற்றங் களைந்து குறைபெய்து வாசித்தல்
கற்றறிந்த மாந்தர் கடன்.
 
  “குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்”
 

(குறள். 504)


புத்தூர், திருச்சிராப்பள்ளி,

29-1-1940

ஞா. தேவநேயன்