முன்னுரை கட்டபொம்மன் காலந்தொடங்கி, காந்தியடிகள் காலம் வரையுள்ள சுமார் ஒன்றரை நூற்றாண்டினை , " இந்திய விடுதலைப் போர் சகாப்தம் " என்று சொல்லலாம். இந்த நீண்ட காலத்திலே, மொழி - சமயம் - கலை - பொருளாதாரம் - சமூகம் ஆகிய பல்வேறு துறைகளிலே நாடு மறுமலர்ச்சி அடைந்தது . ஆனால் , இவற்றைப் பற்றியெல்லாம் தொகுப்பாகக் கூறும் வரலாற்று நூல் எதுவும் இதுவரை முழு அளவில் வெளிவந்திருப்பதாகத் தெரியவில்லை . இங்குமங்குமாகச் சில செய்திகளைத் தரும் நூல்கள் ஆங்கிலத்தில் மட்டு்மே வெளியாகியுள்ளன .அந்த அரைகுறைச் செய்திகள் கூடத் தமிழ்மொழியில் இதுவரை நூல் வடிவம் பெறவில்லை. விடுதலைப் போர் தமிழகத்திலும் நடந்த தென்றாலும் , அந்தப் போரைப்பற்றி இதுவரை வெளியாகியுள்ள ஆங்கில நூல்களிலே , தமிழகம் நியாயமான அளவில் இடம் பெற்றிருக்கிறதென்று சொல்வதற்கில்லை. இதனால் , இந்திய விடுதலைப் போராட்ட காலத்திலே, தமிழினத்தார் நிகழ்த்தியுள்ள புரட்சிகளை - ஆற்றியுள்ள தியாகங்களை ஓரளவு கூட அறிந்து கொள்வதற்கு இயலாத நிலை இன்னமும் நீடித்து வருகிறது. நிச்சயமாக விடுதலைப் போராட்ட காலத்திலே , தமிழ்மொழியும் அதன் வழிப்பட்ட கலைகளும் அடைந்த மறுமலர்ச்சியினை, அந்த மறுமலர்ச்சியைக் காணத் தமிழரிலே ஆன்றோர் பலர் ஆற்றியுள்ள அருந்தொண்டுகளை ஒரு நூல் வழியாக அறிந்து கொள்ள தமிழக மக்களுக்கு வாய்ப்பில்லை. இந்தக் குறையை அகற்றக் கருதியே , "விடுதலைப்போரில் தமிழ் வளர்ந்த வரலாறு" என்னும் இந்நூலை எழுதி வெளியிட்டிருக்கிறேன். இந்நூலை உருவாக்குவதற்கு மகாகவி பாரதியாரின் கட்டுரை களிலிருந்து இங்குமங்குமாக சில செய்திகள் கிடைத்தன . அப்படியே, 'திரு.வி.க.வின் வாழக்கை குறிப்புக்கள்' என்னும் நூலிலிருந்து சில தகவல் களைப் பெற்றேன் . வ.வே.சு.ஐயரவர்கள் ஓராண்டு காலமே நடத்திய ' பால பாரதி ' என்னும் மாத வெளியீட்டுப் பிரதிகளிலிருந்து அவரைப் பற்றிய தகவல்கள் சிலவற்றைச் சேகரித்துக் கொண்டேன். நாடு விடுதலை பெற்றதை அடுத்து வெளியான ' மதுரை மாவட்ட தியாகிகள் மலர்' என்னும் நூலிலிருந்தும் அந்த மாவட்டத்தைப் பற்றிய செய்திகள் சிலவற்றைத் தெரிந்து கொள்ள முடிந்தது. |