எட்டாவது
உரியியல்
292.
உரிச்சொற் கிளவி விரிக்குங் காலை
யிசையினுங் குறிப்பினும் பண்பினுந் தோன்றிப்
பெயரினும் வினையினு மெய்தடு மாறி
யொருசொற் பல்பொருட் குரிமை தோன்றினும்
பலசொல் லொருபொருட் குரிமை தோன்றினும்
பயிலா தவற்றைப் பயின்றவை சார்த்தித்
தத்த மரபிற் சென்றுநிலை மருங்கி
னெச்சொல் லாயினும் பொருள்வேறு கிளத்தல்.
என்பது சூத்திரம்.
இவ்வோத்து என்ன பெயர்த்தோ வெனின், உரிச்சொல் உணர்த்தினமையின் உரிச்சொல் ஒத்து என்னும் பெயர்த்து.
இத் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உரிச்சொற்கெல்லாம் பொதுவாயதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை :
உரிச்சொற்கள் தோன்றுமிடத்து இசையும் குறிப்பும் பண்பும் பற்றிப் பெயர்க்கண்ணும் வினைக்கண்ணும் சென்று பொருள்களை விளக்கும் என்றவாறு.
மெய் என்பது பொருள்; தடுமாறுதல் என்பது
பெயர் பற்றியும் வினைபற்றியும் வரும் வரவினை நோக்கி; அவ்வாறு தடுமாறுங்கால் ஒரு சொல் பல்பொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும் பலசொல் ஒருபொருட்கு உரிமைப்பட்டுத் தடுமாறுதலும் உடைய. அவை அவ்வாறு தடுமாறித் தோன்றுதல் அவற்றிற்கு இலக்கணம்; அவ்வாறு தோன்றுங்கால் பயிலாத உரிச்சொற்களைப் பயின்ற உரிச்சொல்லோடு சார்த்தி உணரப்படும். அவ்வாறு சார்த்திச் சொல்லவே எவ்வகைப்பட்ட சொல்லாயினும் பொருள் விளங்கும்.
‘உறுகால்’ [நற்றிணை - 300]
என்றக்கால், உறு என்பதனை வழக்கினுள்ளாப்
பயிலாமையின், ‘மிகுகால்’ என்று சொல்லுப. மிகு என்பதூஉம் உரிச்சொல், அதனை நடை
|