அதற்கு மெய்யுரை வல்லோர்வாய்க் கேட்டுணர்க. (18)
409.
வினையின் றொகுதி காலத் தியலும்.
உரை : வினைச்சொல் தொகுங்கால், காலந்தோன்றத் தொகும் என்றவாறு.
‘காலத்தியலும்’ என்றது எக்காலும் காலமுடையவாய் இயலும் என்றவாறு.
வரலாறு : கொல் யானை என்பது கொன்ற யானை ; கொல் யானை -- கொல்லாநின்ற யானை ; கொல் யானை -- கொல்லும் யானை என மூன்று காலத்திற்கும் அதுவே வாய்பாடு ; பிறிதில்லை.
மற்றுக், கொல்யானை என்றானேல், நிகழ் காலமும் அறியலாம் ; கொல்லிய ஒடுவதனைக் கண்டு, ‘கொல் யானை’ என்றானேல், எதிர்காலம் என்பது அறியலாம். பிறவும் அன்ன. (19)
410.
வண்ணத்தின் வடிவி னளவிற் சுவையினென்
றன்ன பிறவு மதன்குண நுதலி
யின்ன திதுவென வரூஉ மியற்கை
யென்ன கிளவியும் பண்பின் றொகையே.
உரை : பண்பு தொகுமிடத்து இந் நான்கும்பற்றித் தொகும் என்பது கருத்து.
வண்ணம்பற்றித் தொக்கது :
கருங் குதிரை என்பது ; இது விரியுங்காலை, கரியது குதிரை என விரியும்.
கரியதும் அதுவே, குதிரையும் அதுவே ; கருமை யுடைமையிற் குதிரை கரியது எனப்பட்டது. இன்னது இது என நிற்றல் அதற்கு இலக்கணம்.
இன்னது என்பது கரியது என்றல் ; இது என்பது குதிரை என்றல்.
இனி, வடிவுபற்றித் தொகுத்தல் :
வட்டப் பலகை என்பது ; அது விரியுங்கால், வட்டமாகியது பலகை என விரியும். ஆண்டும் இன்னது இது என்னுங் குணம் நுதலி நிற்கும்.
இனி, அளவுபற்றித் தொக்கது :
குறுங்கோல் என்பது ; அது விரியுங்கால், குறியது கோல் என விரியும். ஆண்டும் இன்னது இது என நிற்கும்.
இனிச்
|