பிற எனின், மலையாது; என்னை, மற்றையுழிப் பொருள் இல்லை என்பது அன்று ; அவன் உணர்தலுறவுநோக்கி இது சொல்லினார் என்பது. (23)
414.
எல்லாத் தொகையு மொருசொன் னடைய.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், இதுவும் ஒட்டுச் சொற்கண்ணே கிடந்ததோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
உரை : அறுவகைத் தொகைச்சொல்லும் எழுவாய் வேற்றுமை யியல்பாம் என்று ஈண்டு எய்துவித்தார் என்பது.
மற்று, ஒட்டுச் சொற்களை, ‘ஒருசொல் நடையன’ எனப் போந்த இலேசு என்னை யெனின், அவை பல சொன்மைப்படப் பொருளிசையா ; ஒருசொல் விழுக்காடு படத் திரண்டிசைக்கும் என்பது கருத்து.
அஃதிணை, யானைக்கோடு, வேங்கைப்பூ என்பனவற்றான் அறிக. கற்சுனைக் குவளையிதழ் என்பதும் அது. (24)
415.
உயர்திணை மருங்கி னும்மைத் தொகையே
பலர்சொன் னடைத்தென மொழிமனார் புலவர்.
இச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உம்மைத் தொகையுள் ஒருசாரனவற்றுக்கண் படுவதோர் வேறுபாடு உணர்த்துதல் நுதலிற்று.
உரை : உயர்திணை மருங்கின் உம்மைத் தொகைச் சொல்லுக்கு இறுதி பலரைச் சொல்லுஞ் சொன்னடைத்தாக என்று சொல்லுப ஆசிரியர் என்றவாறு.
வரலாறு : கபிலபரணர் என வரும்.
இவ்வாறு அத்தொகைச்சொல் லிறுதி பலர் சொன்னடைத்தன்றிக் கபிலன் பரணன் என னகரவீறாய் நிற்பின், அது, ‘வந்தான், போயினான்’ என்னும் ஒருமைவினையேற்பினல்லது, ‘வந்தார், போயினார்’ என்னும் பன்மைவினை ஏலா.
இனிப், ‘பலர் சொன்னடைத்து’ எனவே அவ்விருவர் மேலும் வினையேற்கும்; அதனான் இது சொல்லினார் என்பது.
மற்று
|