|
மை நீக்கமாம். ‘கருங்குவளை’ என்பது, செம்மை முதலியவற்றோடு இயைபு நீக்குதலின், பிறிதின் இயைபு நீக்கமாம். எனவே, விசேடித்தல் இரு வகைய ஆயின. (28)
ஒருமை சுட்டிய விரவுப்பெயர்
185.
ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்
ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே.
இஃது, ஒருமைப்பெயர் எல்லாவற்றையுந் தொகுத்து இரு திணைக்கும் உரிமை கூறுகின்றது.
(இ-ள்.) ஒருமை சுட்டிய எல்லாப் பெயரும்-ஒருமையைக் கருதி வரும் ஒருமை இயற்பெயரும் ஒருமைச் சினப்பெயரும் ஒருமைச் சினை முதற் பெயரும், ஒன்றற்கும் ஒருவர்க்கும் ஒன்றிய நிலையே - அஃறிணை ஒருமைக்கும் உயர்திணை ஒருமைக்கும் பொருந்திய நிலைமையை உடையனவாம், எ-று.
(எ-டு.) கோதை வந்தது - வந்தான் - வந்தாள்; செவியிலி வந்தது-வந்தான்-வந்தாள்; கொடும்புற மருது வந்தது-வந்தான்-வந்தாள் என வரும்.
பெண்மைப் பெயரும் ஆண்மைப்பெயரும் ஒருமையும் உணர்த்துமாயினும், இவை பெண்மை ஆண்மை என்னும் வேறுபாடு உணர்த்தாது ஒருமை உணர்த்தலின், இவற்றை ‘ஒருமைப்பெயர்’ என்றார்.(29)
தாம் என்னும் விரவுப்பெயர்
186.
தாமென் கிளவி பன்மைக் குரித்தே.
இது, தாம் என்னும் பெயர் இருதிணைக்கும் உரித்தாமாறு உணர்த்துகின்றது.
(இ-ள்.)
தாம் என் கிளவி பன்மைக்கு உரித்தே- தாம் என்னும்
பெயர் இருதிணைக்கண்ணும் பன்மைப்பாற்கு உரித்து, எ-று.
(எ-டு.) தாம் வந்தார்,
|