|
வினையியல்
வினைச்சொற்குப் பொதுஇலக்கணம்
200.
வினயெனப் படுவது வேற்றுமை கொள்ளாது
நினையுங் காலைக் காலமொடு தோன்றும்.
என்பது சூத்திரம். இது, நிறுத்த முறையானே வினை இலக்கணம்
உணர்த்தினமையின், இவ்வோத்து வினைஇயல் எனக் காரணப்பெயர்
பெற்றது. இச்சூத்திரம், வினைச் சொற்கெல்லாம் பொதுஇலக்கணம்
உணர்த்துகின்றது.
(இ-ள்.) வினையெனப்படுவது வேற்றுமை கொள்ளாது - வினைச்
சொல் என்று சொல்லப்படுவது வேற்றுமையொடு பொருந்தாது,
நினையும் காலைக் காலமொடு தோன்றும்-ஆராயுங்கால் காலத்தொடு
புலப்படும், எ-று.
‘வினை’ என்றது, முதனிலையை. இஃது ஆகுபெயராய்த் தன்னான்
பிறக்கின்ற சொல்லை உணர்த்திற்று.
(எ-டு.) உண், தின், கரு, செய் என்பன வினை. உண்டல், தின்றல், கருமை, செம்மை என்பன அம் முதல்நிலையான் பிறந்த வினைப்பெயர். உண்டான், தின்றான், கரியன், செய்யன் என்பன அம் முதல்நிலையான் பிறந்த வினைச்சொல். இங்ஙனம் வினையாற் பிறத்தலின், ‘வினை இயல்’ என்றார். (1)
காலம் மூன்று
201. காலந் தாமே மூன்றென மொழிப.
இது, முற்கூறிய காலம் இனைய என்கின்றது.
(இ-ள்.)செய்யப்பட்ட காலந்தாம் மூன்று என்று கூறுவர் புலவர், எ-று.
(2)
காலத்தின் பெயரும் முறையுந் தொகையும்
202.
இறப்பின் நிகழ்வின் எதிர்வி னென்றா
அம்முக் காலங் குறிப்பொடுங் கொள்ளும்
மெய்ந்நிலை யுடைய தோன்ற லாறே.
தான் குறிப்பிற்கும் உண்டு என்கின்றது.
(இ-ள்.)
இறப்பும் நிகழ்வும் எதிர்வும் என்று சொல்
|