நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   654
Zoom In NormalZoom Out


லல் வல்லன்’ எனக் குறிப்பை உணர்த்தியும் நிற்கும். இதற்கு மறை,
‘வல்லன்  அல்லன்’  என்பதாம்.  ‘அல்லள், அல்லர், இல்லள், இல்லர்,
உளள்,  உளர், வல்லள், வல்லர்’ எனவும் ஒட்டுக. இவ்வன்மை முதலிய
நான்கனது பண்பையுங் குறிப்பையும் ஈண்டுங் கொள்க. 

‘அன்ன    பிறவும்’ என்றதனான், ‘நல்லன், நல்லள், நல்லர், தீயன்,
தீயள்,    தீயர்,    உடையன்,    உடையள்,    உடையர்   என்னுந்
தொடக்கத்தனவுங் கொள்க. 

இவ்விரண்டு  சூத்திரத்தாற்  கூறியவற்றை  ‘அம்  ஆம்’  என்பன
முதலிய   வற்றுள்   ஏற்பனவற்றொடு   படுத்து  ஒட்டிக்கொள்ளுமாறு
மேற்கூறுப. (17) 

உயர்திணைக் குறிப்புவினைமுற்றின் ஈறு

217. பன்மையும் ஒருமையும் பாலறி வந்த
அன்ன மரபிற் குறிப்பொடு வரூஉம்
காலக் கிளவி யுயர்திணை மருங்கின்
மேலைக் கிளவியொடு வேறுபா டிலவே. 

இது, முற்கூறிய வினைக்குறிப்பிற்கு ஈறாமாறு கூறுகின்றது. 

(இ-ள்.)     பன்மையும் ஒருமையும் பால் அறிவந்த - பன்மையும்
ஒருமையுமாகிய  பால்களை  அறிய  வந்த, அன்ன மரபிற் குறிப்பொடு
வரூஉம்    காலக்கிளவி-அத்தன்மைத்தாகிய   முறைமையினையுடைய
காலங்  குறித்துக்  கோடலொடு  வரும்  வினைசொற்கள், உயர்திணை
மருங்கின்  மேலைக் கிளவியொடு வேறுபாடு இல- உயர்திணையிடத்து
மேற்கூறிய  தெரிநிலை  வினையின்  ஈறுகளோடு ஈறு வேறுபாடின்றித்
தமக்கு ஏற்பனவற்றைக் கொள்ளும், எ-று. 

அவை   ‘அம், ஆம், எம், ஏம்,  என், ஏன்’ என்னுந் தன்மை ஈறு
ஆறும், அன், ஆன், அள், ஆள், அர், ஆர்’ என்னும் படர்க்கை ஈறு
ஆறுமாம். 

(எ-டு.)  கரியம்,  கரியாம்;  கரியெம், கரியேம்; கரியென், கரியேன்
எனவும்,  கரியன்  கரியான்; கரியள், கரியாள்; கரியர், கரியார் எனவும்
வரும்.   ‘உடையம்,   நிலத்தம்,   பொன்னன்னம்,   அல்லம்’   என
ஒழிந்தவற்றோடும் ஒட்டுக.