|
பெரிய ஓதினும் சிறிய உணரா’ (புறம். 375: 18 19) என அகரம் வினைக் குறிப்புப்பற்றி வருவனவும், ‘செவ்வன் தெரிகிற்பான்’ எனவும், ‘புதுவதின் இயன்ற அணியன்’ (அகம். 66) எனவும், ‘புதுவது புனைந்த வெண்கை யாப்பு’ (மலைபடு. 28) எனவும், ‘பொய்கை பூப் புதிதீன’ (கலி. 31:5) எனவும், ‘பெருங்கை யற்றவென் புலம்பு’ (புறம். 210-15) எனவும், ‘சிறு நனி நீதுஞ்சி ஏற்பினும்’ (கலி.12:8) எனவும், ‘ஒல்லைக் கொண்டான்’ எனவும், அகர ஈறு அன்றிப் பிற ஈறுகளான் முடிக்குஞ் சொல்லை விசேடித்து வருவனவும், ‘வினையெஞ்சு கிளவியும் வேறுபல் குறிய’ (457) என்பதனான் பெறப்படும். இது மறைக்கண், ‘கூறாமல் குறித்தன்மேற் செல்லுங் கடுங்கூளி’ (கலி. 1:3) என மல் ஈறாயும், ‘கூறாமை நோக்கிக் குறிப்பறிவான்’ (குறள். 701) என மகர ஐகார ஈறாயும் வரும்.
|
|
இனிக் குகரம், உணற்கு வந்தான், என எதிர்காலத்து வரும். உண்டான், உண்டவன் என்னும் தொழிற்பெயர்கள், உண்டாற்கு, உண்டவற்கு என நான்கன் உருபை ஏற்றுழிச் செயற்கு எனும் எச்சப்பொருள் தரும் மயக்கமின்மையும், உணல் என்னும் வினைப்பெயர் குகரம் அடுத்துழி உண்டலைச் செய்தற்கு என்னும் பொருள் தந்து எச்சப்பொருட்டாயே நிற்றலின், வினைப்
பெயர் நான்கன் உருபு பெற்று நின்றது என்னும் மயக்கம் இதற்கு இன்மையும் உணர்க. எற்றுக்கு வந்தான்? என்பது எக்காரியம் செய்தற்கு வந்தான்? என்னும் பொருட்டாய் இவ்வெச்சக்குறிப்பாய் நிற்கும். எவற்றுக்கு என்பதும் அது.
|
|
இவ்வினையெச்சங்கட்கு எஞ்சி நிற்கும் வினைகளும் அறுவகைப் படும் அவை, தெரிநிலைமுற்றும், குறிப்புமுற்றும், பெயரெச்சமும், பெயரெச்சக் குறிப்பும், வினையெச்சமும், வினையெச்சக் குறிப்பும் ஆம். ஓதிவந்தான் - இது தெரிநிலைமுற்று; ஓதி நல்லன் - இது குறிப்பு முற்று; ஓதிப் பெற்ற பொருள் - இது பெயரெச்சம்; ஓதி நல்ல சாத்தன் -
|