|
தில் என்னும் இடைச்சொல்லின் பொருள்
255. விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென்று
அம்மூன் றென்ப தில்லைச் சொல்லே.
இதுவும் அது.
(இ-ள்.) தில்லைச்சொல் விழைவே காலம் ஒழியிசைக்கிளவி என்று அம்மூன்று என்ப-தில்லைச் சொல் விருப்பமுங் காலமும் ஒழிந்துநின்ற பொருண்மையும் என்று சொல்லப்பட்ட அம்மூன்று கூற்றையுடையதென்று கூறுவர் ஆசிரியர், எ-று.
(எ-டு.) ‘வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொழி அரிவையைப், பெறுகதில் அம்ம யானே’ (குறுந். 14) எனப் பெறுதற்கண் உளதாகிய விருப்பங் கூறிற்று.
‘வருகதில் வல்லே வருகதில் வல்லென, வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப, நூலரி மாலை சூடிக் காலிற், றமியன் வந்த’ (புறம்.284:1-4) இது காலங் குறித்தது. ‘வருகதில் அம்மவெஞ் சேரி சேர’ (அகம்.276-7) என வந்தக்கால், இன்னது செய்வல், என ஒழியிசை குறித்தது. (5)
‘கொன்’ என்னும் இடைச்சொல்லின் பொருள்
256.
அச்சம் பயமிலி காலம் பெருமையென்று
அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே.
இதுவும் அது.
(இ-ள்.) கொன்னைச்சொல் அச்சம் பயமிலி காலம் பெருமை என்று அப்பால் நான்கே-கொன்னைச்சொல் அச்சப்பொருள் பயம் இன்மைப் பொருள் காலப்பொருள் பெருமைப்பொருள் என்று கூறப்பட்ட அக்கூற்று நான்கேயாம், எ-று.
(எ-டு.) ‘கொன்முனை இரவூர் போல’ (குறுந். 91) என அச்சமும், ‘கொன்னே கழிந்தன் றிளமையும்’ (நாலடி.55) எனப் பயம் இன்மையும், ‘கொன்வரல் வாடை’ எனக் காதலன் நீங்கிய காலம் அறிந்து வருதலை யுடைய வாடை எனக் காலமும், ‘கொன்னூர் துஞ்சினும்’ (குறுந். 138) எனப் பெருமையும் உணர்த்திற்று. (6)
‘உம்’ என்னும் இடைச்சொல்லின் பொருள்
257.
எச்சஞ் சிறப்பே ஐயம் எதிர்மறை
முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கமென்று
அப்பால் எட்டே உம்மைச் சொல்லே.
இதுவும் அது.
(இ-ள்.) உம்மைச்சொல் எச்சம் சிறப்பே ஐயம் எதிர்மறை முற்றே எண்ணே தெரிநிலை ஆக்கம் என்று அப்பால் எட்டே - உம் என்னுஞ் சொல், எச்சத்தைக் குறிப்பதுஞ் சிறப்பைக் குறிப்பதும் ஐயத்தைக் குறிப்பதும், எதிர்மறையைக் குறிப்பதும், முற்றைக் குறிப்பதும் எண்ணைக் குறிப்பதுந், தெரிநிலையைக்
|