|
‘அடகுபுலால் பாகு பாளிதமும் உண்ணான், கடல்போலுங் கல்வி யவன்.’ என வரும். பிற்படக் கிளப்பின் பொருள் கொள்ளாமை காண்க. ‘செஞ்சொல் ஆயின் முற்படக் கிளக்க, எனவே, ‘உம்மையொடு வரின் பிற்படக் கிளக்க,’ என்றவாறாம். (36)
முற்றுமை எச்சஉம்மையாகும் வழுவமைதி
287.
முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின் எச்சக் கிளவி உரித்து மாகும்.
இது, முற்றுமை எச்சவும்மையாம் பொருளும் தருமென வழு அமைக்கின்றது.
(இ-ள்.) முற்றிய உம்மைத் தொகைச்சொல் மருங்கின்-முற்றும்மை அடுத்து நின்ற பெயரும் வினையுஞ் சார்ந்த சொல்லிடத்து, எச்சக்கிளவி உரித்தும் ஆகும்-எச்சச்சொல் உரித்துமாகும், எ-று.
எனவே எச்சப்பொருள் குறியாது நிற்றலே பெரும்பான்மை. ‘ஏற்புழிக் கோட’லான், இஃது எதிர்மறைக்கண்ணது எனக் கொள்க.
(எ-டு.) பத்துங் கொடால். அனைத்துங் கொடால் என்னும் முற்றும்மைகள், ‘சில கிடக்கக் கொடு,’ என எச்சப்பொருள் உணர்த்தி நின்றவாறுகாண்க. ‘தொகைச்சொல்’ என்றதனானே, ‘எல்லாரும் வாரார்,’ எனப் பொருட்பெயர்க்கண்ணுங் கொள்க. ‘பத்துங் கொடு; பிறவுங் கொடு,’ என்பது கருத்தாயின், அஃது எச்ச வும்மையாம். (37)
ஈற்றசை ஏகாரத்திற்கு வேறோர் இலக்கணம்
288.
ஈற்றுநின் றிசைக்கும் ஏயெ னிறுதி கூற்றுவயின் ஓரள பாகலு முரித்தே.
இஃது, ஈற்றசை ஏகாரத்திற்கு வேறோர் இலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.) ஈற்று நின்று இசைக்கும் ஏ என் இறுதி-செய்யுள் இறுதிக் கண் நின்று இசைக்கும் ஈற்றசை ஏகாரம், கூற்றுவயின் - அச்செய்யுளிடத்துப் பா என்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்து, ஒரு அளபு ஆகலும் உரித்தே-தனக்கு உரிய இரண்டு மாத்திரையே அன்றிப் பின்னரும் ஒருமாத்திரை உண்டாய் வருதலும் உரித்து, எ-று.
உம்மையான், மூன்று மாத்திரை பெறாது இரண்டு மாத்திரை பெற்று வருதலும் உரித்தாயிற்று. பா என்னும் உறுப்பினை நிலைபெறக் கூறுமிடத்து மூன்று மாத்திரை பெறுவது செய்யுள் இறுதிக்கண் நிற்கும் ஈற்றசையே என்பது அறிவித்தற்கு
|