|
‘ஏயென் இறுதி’ என்று மீட்டுங் கூறினார்.
(எ-டு.) ‘கடல்போல் தோன்றல் காடிறந் தோரேஎ’ (அகம்.1:19) ‘அகில்படு கள்ளியங் காடிறந் தோரேஎ’, ‘தண்கடல் வேலிநின் குடநாடற்றேஎ’ இவை போல்வன பிறசான்றோர் செய்யுட்களெல்லாம் மூன்று மாத்திரை பெற்றுப் பா என்னும் உறுப்பை விளக்கி நிற்குமாறு காண்க.
இனி, ‘அவரே, கேடில் விழுப்பொருள் தருமார் பாசிலை, வாடா வள்ளியங் காடிறந் தோரே’ (குறுந்.216) எனச் செய்யுள் இடைக்கண் வரும் ஈற்றசை ஏகாரம் இரண்டு மாத்திரை பெற்றுப் பா என்னும் உறுப்பை விளக்கி நின்றவாறு காண்க. இஃது ஈற்றசையாகலின், செய்யுளியலிற் கூறும் மாத்திரை என்னும் உறுப்பின்கண் அடங்காது என்று ஈண்டுக் கூறினார், அது பெரும்பான்மை பொருள்தருஞ் சொற்கே விதியாகலின். (38)
எண்களுக்கு முடிபு வேற்றுமை
289.
உம்மை யெண்ணும் எனவெ னெண்ணும் தம்வயின் தொகுதி கடப்பா டிலவே.
இஃது, எண்களுக்கு முடிபுவேற்றுமை கூறுகின்றது.
(இ-ள்.) உம்மை எண்ணும் என என் எண்ணும்-உம்மையான் வரும் எண்ணும் எனவான் வரும் எண்ணும், தம்வயின் தொகுதி கடப்பாடு இலவே - தத்தம் இறுதிக்கண் தொகைச்சொல் பெறுதலை முறைமையாக உடைய வல்ல, எ-று.
எனவே, தொகைபெற்றும் பெறாதும் வரும் என்பதாம்.
(எ-டு.) ‘உயர்திணைக் குரிமையும் அஃறிணைக் குரிமையும் ஆயிரு திணைக்குமோ ரன்ன உரிமையும் அம்மூ வுருவின’ (162) ‘இசையினும் குறிப்பினும் பண்பினும் தோன்றி’ (299) ‘நிலனென நீரெனத் தீயென வளியென நான்கும்’ ‘உயிரென உடலென இன்றியமையா’ என வரும். ‘தொகை’ எனப் பொதுப்படக் கூறிய அதனான், எண்ணுப்பெயரே அன்றி, ‘அனைத்தும், எல்லாம்’ என்னுந் தொடக்கத்தனவுங் கொள்க. (39)
எண்ணேகாரம் இடையிட்டும் வரும்
290.
எண்ணே காரம் இடையிட்டுக் கொளினும் எண்ணுக்குறித் தியலும் என்மனார் புலவர்.
இஃது, எண்ணிடத்து வழு அமைக்கின்றது.
(இ-ள்.)
எண் - உம்மையும் ஏகாரமும் எனவும் என்றும் எனாவும் என்றாவும் செவ்வெண்ணுமாகிய எழுவகை எண்களுள் ஒன்று முதல் நின்று, ஏகாரம்
|