நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   722
Zoom In NormalZoom Out


 

தந்தே   நிற்றல் வேண்டும். அங்ஙனம் உம்மை  விரிந்து நிற்குமிடத்து
வைத்தான்   என்னும்    வினைமுதல்வினைக்குப்   புலியும்  வில்லுங்
கெண்டையுஞ்  செயப்படு  பொருளாய்  இரண்டாம்  உருபே  விரிந்து
நிற்றலும், எறிந்தான் என்னும் வினைமுதல்வினைக்கு யானை முதலியன
செயப்படுபொருளாய் இரண்டாம் உருபே விரிந்துநிற்றலும் உணர்க.
    

‘குன்றி கோபம் கொடிவிடு பவளம்
ஒண்செங் காந்தள் ஒக்கும் நின்னிறம்’

    

என்னும்     பலபெயர்  உம்மைத்தொகைக்கும் உம்மையும் உருபும்
விரித்தே  பொருள்  உரைக்க.   இக்குன்றி முதலியவற்றைச் செவ்வெண்
ஆக்கி,   இவற்றை  எனத்  தொகை  கொடுத்து  உருபு  விரித்துழியும்
அச்சுட்டு   அக்குன்றி  முதலிய   வற்றையே  சுட்டுதலின்,  அக்குன்றி
முதலியன  செயப்படு பொருளாயே  நிற்குமாறு முணர்க. அன்றி அவை
செவ்வெண்    ஆயின்,    ‘நிலநீர்   வளிவிசும்   பென்ற   நான்கின்
அளப்பரியை’   (பதிற்.   14:1,2)  என்றாற்போல  உம்மையும்  உருபும்
விரித்தற்குப்  பொருந்தாது   எழுவாயாய்,  நான்கு  என்னும் தொகைச்
சொற்  பயனிலை  கொண்டு  நிற்றல் வேண்டும் என்று உணர்க. இவை
உம்மைத்   தொகைக்கண்   உருபு   தொக்கன.   இங்ஙனம்  இரண்டு
தொக்கனவற்றை   என்ன   தொகை   என்று   கோடுமோ?   எனின்,
புலியையும்  வில்லையுங்   கெண்டையையும் வைத்தான், என விரித்துழி
எண்ணுப்   பொருள்  தந்து   நிற்கும்  உம்மையினுஞ்  சொற்றொடர்ப்
பொருளை  உணர்த்தி  நிற்பது   உருபு  ஆதலின், அச்சிறப்பு நோக்கி
உருபு தொகை என்றே கோடும்.
 

இனி,    ‘பாட்டும் கோட்டியும் அறியாப் பயமில், தேக்கு மரம்போல்
நீடிய  ஒருவன்’  ‘இசையினுங்   குறிப்பினும் பண்பினுந் தோன்றி’ (299)
என்னும் இவை, உம்மை விரிந்து  நின்று, உருபு தொக்கன.       (43)