நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   731
Zoom In NormalZoom Out


உரிச்சொல்லது குறிப்புப் பொருட்டாம், எ-று. 

(எ-டு.)  ‘உருகெழு  ஞாயிற்  றொண்கதிர்  மிசைந்த’  (புறம். 160:1)
‘புரைய மன்ற புரையோர் கேண்மை, (நற்.1) என வரும்.
 

‘உருவக்  குதிரை மழவர் ஓட்டிய’ (அகம்.1:2) ‘உருவமென் றுரைத்தி
யாயின்’  (சீவக.1585) என உருவு  வடிவழகையும்,  ‘புரைதீர்  கேள்விப்
புலவ  ரான’  எனப் புரை குற்றத்தையும் உணர்த்துதல், ‘கூறிய கிளவிப்
பொருள்நிலை அல்ல’ (390) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. (4)
 

குரு, கெழு என்பவற்றின் பொருள் 

303. குருவுங் கெழுவும் நிறனா கும்மே. 

இது பண்பு. 

(இ-ள்.) குருவும் கெழுவும்  நிறன் ஆகும்மே - குரு என்னும் உரிச்
சொல்லும் கெழு என்னும் உரிச்சொல்லும் நிறன் என்னும் உரிச்சொல்லது
பண்புப் பொருளாம், எ-று.
 

(எ-டு.)   ‘குருமணித் தாலி.’   ‘நறுஞ்சார்ந்து  புலர்ந்த  கேழ்கிளர்
அகலம்’ (மதுரைக்.493) என வரும்.
 

‘குரூஉத்துளி பொழிந்த,’ ‘குரூஉக்கண் இறடிப் பொம்மல்’  (மலைபடு.
169)  எனக்  குரு  நீடலும்,  ‘செங்கேழ்  மென்கொடி  ஆழி  அறுப்ப’
(அகம்.80)  எனக்  கெழு   கேழ்  என   நீடலும்   ஈறு   கெடுதலும்,
‘எழுத்துப்பிரிந்திசைத்தல்   இவணியல்  பின்றே.’   (395)  என்பதனாற்
கொள்க.  கெழு  என்று  வரும்  இடம்  உளதாயின் கொள்க. இக்கெழு
பொருத்தத்தை   உணர்த்துதலும்,  கெழுமுதல்   என்னும்   வழக்கிற்கு
முதனிலையாய்  நிற்றலுங்  ‘கூறிய கிளவி’ (390)  என்பதனாற்  கொள்க.
மேல்வருஞ் சூத்திரங்கட்கும் இவ்வாறே பொருள் கூறுக. (5)
 

செல்லல், இன்னல் என்பவற்றின் பொருள் 

304. செல்லல் இன்னல் இன்னா மையே. 

இது குறிப்பு. 

(இ-ள்.)  செல்லல்  இன்னல்  இன்னாமையே-செல்லலும் இன்னலும் இன்னாமை என்னுங் குறிப்பு உணர்த்தும், எ-று. 

(எ-டு.)  ‘மணங்கமழ்  வியன்மார்  பணங்கிய செல்லல்’ (அகம்22:3) ‘வெயில்புறந்  தரூஉம்  இன்னல் இயக்கத்து’ (மலைபடு.374) என வரும். (6) 

மல்லல், ஏ என்பவற்றின் பொருள் 

305. மல்லல் வளனே ஏபெற் றாகும். 

இதுவும் அது.

(இ-ள்.) மல்லல் வளனே-மல்லல் செல்வம் என்னும் குறிப்பினையும்,
ஏ பெற்று  ஆகும் - ஏ என்பது  பெருக்கம்  என்னுங் குறிப்பினையும்
உணர்த்தும், எ-று.
 

பெற்று அடுக்குதலுமாம். 

(எ-டு.) ’மல்லல்மார்   படுத்தனன்   புல்லுமா   றெவனோ!’  ‘ஏகல
 அடுக்கத் திருளளைச் சிலம்பின்’ (அகம்.52:5) என வரும். (7)
 

உகப்பு, உவப்பு என்பவற்றின் பொருள் 

306. உகப்பே உயர்தல் உவகை. 

இதுவும் அது. 

(இ-ள்.) உகப்பே    உயர்தல்  உவப்பே  உவகை-உகப்பு  உயர்வு
என்னுங்