நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   764
Zoom In NormalZoom Out


ஒரு சொல் அடுக்கு 

411. இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல்என்று
அவைமூன் றென்ப ஒருசொல் அடுக்கே. 

இதுவுந் தொகைச் சொற் போல அடுக்கி வருவன கூறுகின்றது. 

(இ-ள்.)   ஒரு சொல் அடுக்கே-ஒரு சொல்லை அடுக்கும் அடுக்கு,
இசைநின்ற  அசைநிலை பொருளொடு புணர்தல் என்று அவை மூன்று
என்ப-இசைநிலையும்  அசைநிலையும் பொருளொடு புணர்தலும் என்று
சொல்லப்பட்ட   அவை மூன்றும் என்று சொல்லுவர் ஆசிரியர், எ-று. 

(எ-டு.)   ‘ஏஏ  ஏஏ  அம்பல்  மொழிந்தனள்’-இஃது  இசைநிறை.
‘மற்றோ மற்றோ’   இஃது   அசைநிலை. ‘வந்தது    வந்தது  கூற்று’ 
(நாலடி.4)  அவன்  அவன்,   வைதேன்  வைதேன்,  போம்  போம்
என்பன  விரைவும், துணிவும்,  உடம்பாடும், ஒரு  தொழில்  பலகால்
நிகழ்தலுமாகிய  பொருள்  வேறுபாடு  உணர்த்தலின்,   பொருளொடு
புணர்தல்.                                 (15)   

தொகைமொழியின் வகை

412. வேற்றுமைத் தொகையே உவமத் தொகையே
வினையின் தொகையே பண்பின் தொகையே
உம்மைத் தொகையே அன்மொழித் தொகையென்று
அவ்வா றென்ப தொகைமொழி நிலையே. 

இது, தொகைச்சொற்குப் பெயரும் முறையும் தொகையுங் கூறுகின்றது.

(இ-ள்.)    வேற்றுமைத் தொகையே- வேற்றுமை உருபுகள் தொக்க
தொகை,   உவமத்   தொகையே-உவம  உருபுகள்  தொக்க  தொகை,
வினையின்  தொகையே  -  வினைச்சொல்  ஈறுகள்  தொக்க தொகை,
பண்பின்  தொகையே  -  பண்பு உணர்த்தும் ஈறுகள் தொக்க தொகை,
உம்மைத் தொகையே - ‘உம்’ என்னும் இடைச் சொல் தொக்க தொகை,
அன்மொழித்  தொகை-இத்  தொகைச்  சொற்களின் இறுதிக்கண் வந்து
பொருள்  தரும்  வேறொரு  சொல் தொக்க தொகை, என்று அவ்வாறு
என்ப  -  என்று  சொல்லப்பட்ட  அவ்  வாறும்  என்று  சொல்லுவர்
ஆசிரியர், தொகை மொழி நிலையே -தொகைச் சொல்லினது நிலை