|
ஈறுகளை ஏற்ற சொல்லாயே நின்றும், அவற்றிற்கு ஏற்ற முடிபு
கொள்ளும் என்று உணர்க.
ஆசிரியர் செய்யுளின்பம் நோக்கி அவ்வுவம உருபுகளைப் பெரும்
பான்மை செயவெனெச்ச வாய்பாட்டானும் சிறுபான்மை செய்த என்னும் பெயரெச்ச வாய்பாட்டானும் ஓதினாரேனும், ஏனை வாய்பாடுகளும் அம் முதனிலைக்கண் விரியுமாறு ஆண்டு உணர்க.
புலிப்பாய்த்துள், மழைவண்கை, துடிநடுவு, பொன்மேனி என வினை
பயன் மெய்யுருவின்கண் வந்த இவ்வுவமத் தொகைகள் விரிந்துழிப்போலும் என்னும்
உருபானும் அன்ன என்னும் உருபானும் பிற உருபானும் விரிந்து, செய்யும், செய்த என்னும் பெயரெச்சக் குறிப்பு ஆமாறு உணர்க. அவற்றுள் போலும் என்பது, செய்யும் என்னுங் குறிப்பு முற்று ஆமாறும் உணர்க. உணர்த்துங்காற் புலிபோலும் பாய்த்துள், புலி அன்ன பாய்ந்துள் என விரித்தால் உணராதானை, ‘இதன் பொருள் புலியினது பாய்த்துனை ஒத்த பாய்த்துள் என்றவாறு காண்,’ என ஒப்பு என்னும் வழக்கு வாசகத்தான் செய்யும், செய்த என்னும் பெயரெச்சக் குறிப்பு வாசகந் தோன்ற உணர்த்துக.
‘முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு’
(குறள்.1113)
என்புழி, வேய்த்தோளவட்கு முறிபோலும் மேனி; முத்தம்போலும்
முறுவல், தெய்வ மணம்போலும் இயற்கை நாற்றம்; வேல்போலும்
கண், என விரித்தால் உணராதானை, ‘இதன் பொருள், வேய்த்தோளவட்குத் தளிரினது நிறத்தை ஒக்கும் நிறம்; முத்தினது நிறத்தை ஒக்கும்
பல்லு; தெய்வ மணத்தை ஒக்கும் இயல்பான நாற்றம்; வேலினது கொலைத்தொழிலை ஒக்கும் கண், என்றவாறுகாண்,’ என ஒப்பு என்னும் வழக்கு வாசகத்தான் செய்யும் என்னும் குறிப்பு முற்று
வாசகம் தோன்ற உணர்த்துக. ‘கண் மலர்ந்த காவி’ என்புழிக் ‘கண் போல மலர்ந்த காவி’ என்றவாறுகாண்,’ என ஒப்பு என்னும் வழக்கு வாசகத்தான் செயவெனெச்ச வாசகந்தோன்ற உணர்த்துக.
இங்ஙனம் கூறிய இருவகை எச்சத்தையும் முற்றையும் இவ்வுவம உருபுகள் தருமாறு காண்க.
இனி, ‘முறிமேனி முதலியன உருவகமாம்,’ எனின்
ஆசிரியர்க்கு
உருவகமும் உவமையாமாறு ஆண்டு உணர்க.
‘இங்ஙனம் வேற்றுமை உருபும் உவம உருபும்
விரிந்துழி, வேற்றுமைத் தொகை என்று கோடுமோ, உவமத்தொகை என்று கோடுமோ?’ எனின். ஆசிரியர் தாம் மேற்கூறும் உவமஉருபுகளில் சில இரண்டாவதற்கு முடிபாம் என்பது உணர்த்துதற்கு
உவம உருபிற்கெல்லாம் பொதுவாய் வழக்குவாசகமாய் நிற்கும் ஒப்பு
என்னும் உருபினைக் ‘காப்பின் ஒப்பின்’ (73) என எடுத்து ஓதினாராதலின், அவ்விரண்டாவது அவ்வுவம உருபுகளான் முடிந்து நின்றுழி உவமத் தொடர்மொழி ஒப்புமைப் பொருளே தந்து நிற்றலின், உவமத்தொகை என்று கோடும்.
‘ஆயின், எடுத்து ஓதிய ஒப்பு என்பதனோடு அன்றி
ஏனை உருபுகளோடும் இரண்டாவது முடியுமோ? எனின் முடியும்; ‘தீயின் அன்ன ஒண் செங் காந்தள்’ (மலைபடு.145) எனவும், ‘கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்’ (குறுந்.9) எனவும், ‘மானோக்கு நோக்கு மடநடை ஆயத்தார்’ எனவும், ‘எழிலி வானம் எள்ளினன் தரூஉம், கவிகை வண்கைக் கடுமான் தோன்றல்’ எனவும், ‘வீங்கு சுரை நல்லான் வென்ற ஈகை’ எனவும் வருவனவற்றின்கண் ‘அன்ன, மானும், நோக்கி, எள்ளி, வென்ற’ என்னும் உவம உருபுகளை இரண்டாவது கொண்டு முடிந்தவாறு காண்க. இவற்றுள் எள்ளி என்பது, செய்தெனெச்ச மாகிய உவம உருபு. இங்ஙனம் உவம உருபு விரிந்துழி நின்று உவமப் பொருள் தருகின்ற இரண்டாவது தொக்குழியும் அவ்வுவமப் பொருள் தந்தே நிற்கும் என்றுணர்க.
‘என்போல் பெருவிதுப் புறுக.’ (புறம்.83:4)
என்புழிப் ‘போல்’
என்பது ‘போல’ என்னும் செயவெனெச்சக் குறிப்பாகிய உவம
உருபு. ‘நும்மனோருமற்றினைய ராயின்’
(புறம்.210:3) என்புழி,
‘அன்னோர்’ என்பது உவம உருபாகிய இடைச் சொல்முதல்நிலையாகப்
பிறந்த பெயர். இனிச் சிறுபான்மை ஏனை யுருபுகள் இத்தொகைக்கண்
விரியுமாறு உவம இயலுட் காண்க.
சேனாவரையர் இவற்றை உவம
உருபு அல்ல என்றும், உவம
உருபு களை இரண்டாவது கொண்டு முடியாது என்றும் கூறினாரால்
எனின், அவர் ஆசிரியர் கருத்துஞ் சான்றோர்
செய்யுள் வழக்கமும்
உணராமற் கூறினார் என்பது இக்கூறியவாற்றான் உணர்க.
(18)
வினைத் தொகை
415. வினையின் தொகுதி காலத் தியலும்.
இது, வினைத்தொகை கூறுகின்றது.
(இ-ள்.)
நிற்கும் எழுத்துக்கள், காலத்து இயலும் -
காலத்தின்
கண்ணே தொக்கு நிற்கும், எ-று.
வினை என்றது ‘உண், தின்’ முதலிய முதனிலைகளை. அவை ஈண்டு
ஆகுபெயராய்த் தம்மாற்பிறந்த பெயரெச்சத்தை
உணர்த்தின. தொகுதி யாவன, அகரமும், ‘நில், கின்று என்பனவும்
உம்முமாம். அவை காலத்து இயலுதலாவது, ‘கொல் யானை’ எனத் தொகுத்துக் ‘கொன்ற யானை’ என விரித்தால், ‘செய்த’ என்னும் பெயரெச்ச
வாய்பாட்டுத் தகர ஈறு இறந்த காலம் உணர்த்துதலும், கொல்லாநின்ற யானை, கொல்கின்ற யானை’ என விரித்தால், ‘நின்ற, கின்ற’ என்னும் பெயரெச்சம் நிகழ்காலம் உணர்த்து தலும், ‘கொல்லும்
யானை’ என விரித்தால், செய்யும் என்னும் பெயரெச்சத்து உம்
ஈறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்துதலுமாம்.
ஆயின், உம் ஈறு எதிர்காலம் உணத்துதல் யாண்டுப்
பெறுதும்
எனின், ‘காலத் தியலும்’ என மூன்று காலத்திற்கும் பொதுவாகக் கூறிய
அதனான் பெறுதும். இக்கருத்தானே பின்பு நூல்
செய்தவர்கள்
எல்லாரும் உம் ஈறு எதிர்காலமே
உணர்த்தும் என்றார்.
சேனாவரையரும் இக்கருத்தானே ‘அகன்றவர் திறத்தினி நாடுங்கால்’
(கலி.16:3,4) என்பதே
|