|
வேழம் தீவியது எனவும், ‘இடைச்சொல் எல்லாம்’ (455) எனவும், ‘உரிச்சொல் மருங்கினும்’ (456) எனவும் பின்வரும் சொல் இன்றியும் தம் பொருள் உணர்த்துதல் பற்றி எடுத்தோத்தினுள் முடியாமையின், இலேசான்
கொண்டார். ‘வட்டப் பலகை’ ‘அகங்கை’ முதலியன பின்வரும் சொல்லோடு அன்றித் தம் பொருள் உணர்த்தாமையின், நிறுத்த சொல்லும் குறித்து வருகிளவியுமாய் நிற்கும் என்று அவற்றை முடித்தார். இவற்றிற்குப் பின் வரும் சொல், முன்வரும் மொழியை விசேடியாது நிற்கும். இங்ஙனம் வரும் என்றற்கு அன்றே ஆசிரியர் ‘இன்னது இது,’ என்று முன் மொழியை விசேடிப்பதாகவும், பின் மொழியை விசேடிக்கப்படுவதாகவும் கூறுவா ராயிற்று என்று உணர்க.
(20)
உம்மைத்தொகை
417.
இருபெயர் பலபெயர் அளவின் பெயரே
எண்ணியற் பெயரே நிறைப்பெயர்க் கிளவி
எண்ணின் பெயரோ டவ்வறு கிளவியுங்
கண்ணிய நிலைத்தே உம்மைத் தொகையே.
இஃது, உம்மைத்தொகை கூறுகின்றது.
(இ-ள்.)
உம்மைத்தொகை-உம்மை தொக்கு நிற்கும் தொகை, இரு
பெயர்-இரண்டாகிய பெயரும், பல பெயர்-பலவாகிய பெயரும், அளவின் பெயர்-அளத்தலான் உளதாகிய பெயரும், எண் இயல் பெயர்-எண்இயலான்
ஆகிய உயர்திணைப்
பெயரும், நிறைப்பெயர்க்கிளவி-நிறுத்த லான் ஆகிய பெயர்ச் சொல்லும், எண்ணின் பெயரோடு-எண்ணினான் உளதாகிய அஃறிணைப் பெயரோடே கூறப்பட்ட, அவ்வறு கிளவியும் கண்ணிய நிலைத்து - அவ்வாறு சொல்லையுங் கருதின நிலைமையை உடைத்து, எ-று.
(எ-டு.) உவா அப் பதினான்கு, புலிவிற்கொண்டை,
தூணிப் பதக்கு, பல பெயரினும் இரண்டு இறந்த பல பெயரினும் தொகும் என்றற்கு ‘இரு பெயர், பல பெயர்’ என்றார். அளவுப்பெயர் முதலியன இரு பெயர்க்கண் அடங்கும் எனினும், முன்னர் யாண்டும் பொருள் வேற்றுமை பற்றி வேறாக ஓதுதலின், ஈண்டும் எடுத்து ஓதினார்.
(21)
அன்மொழித்தொகை
418.
பண்புதொக வரூஉம்
|