நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   779
Zoom In NormalZoom Out


கூறிய அவ்வாறு வகைச் சொல்லை, இறப்பின் நிகழ்வின் எதிர்வின்
என்ற   சிறப்பு   உடை   மரபின்   அம்முக்காலமும்  இயல்  முற்று
என்ப-இறப்பு   ஒன்றானும்   நிகழும்  சிறப்புடை  மரபானும்  நிகழ்வு
ஒன்றானும்  நிகழும்  சிறப்புடை மரபானும் எதிர்வு ஒன்றானும் நிகழும்
சிறப்புடை  மரபானும்  இயலும்  முற்றுச்சொல்  என்று பெயர் கூறுவர்
ஆசிரியர், எ-று. 

‘அம்ஆம்’     (204)  என்னுஞ்  சூத்திரம்  முதலாகப்  ‘பல்லோர்
படர்க்கை’  (229)  என்னுஞ்  சூத்திரம்  இறுதியாக,  மூவகை இடமும்
மூவகைப்   பொருளும்  இருவகை  வினையும்  எடுத்து  ஓதியவற்றை
ஈண்டும்  ஓதியது  அனுவாதம்  ஆயிற்று. ஆண்டு ஓதாது எஞ்சிநின்ற
காலமும்   குறியீடும்  ஈண்டு  ஓதியது  இலக்கணமாயிற்று.  முன்னர்க்
‘குறிப்பினும்  வினையினும்’  (203)  என்னுஞ் சூத்திரத்தின் காலமொடு
வரூஉம்   வினைச்சொல்   எல்லாம்,  என்றது,  மூவகை  வினைக்கும்
பொதுவாய் நின்று ஒரோவொரு முற்று வினையும் முக்காலமும் பெற்றே
வரும் என்னும் ஐயம் நிகழ்த்தின அதனை ஒரோவொரு காலம் பெற்று
வருவனவும்  முக்காலமும்  பெற்று  வருவனவுமாய் நிற்கும் முற்று என
ஐயம்    அகற்றினார்    இச்சூத்திரத்தான்.    எச்சங்கட்கு    மேலிற்
சூத்திரத்தான் ஐயம் அகற்றுப. மேல் ‘பிரிநிலை வினை’ (430) என்னுஞ்
சூத்திரத்தான்  எச்சங்கட்குக்  குறியீடு கூறுகின்றார் ஆதலின், அதற்கு
ஏற்ப முற்றிற்கும் குறியீடு கூறினார். 

இனி,  அவை  காலத்தொடு  வருங்கால்,  றகர  உகரம்    இறந்த
காலத்தாற் சிறந்தது.  உம்மொடு  வரூஉம்  கடதறவும், கடதற என்னும்
அந்நான்கு  ஊர்ந்த  குன்றிய  லுகரமும்,  அல்லும்  பகரமும்  மாரும்
ஆவும் வவ்வும் ஆகிய பதின்மூன்றும் எதிர்காலத்தாற்  சிறந்தன. அம்,
ஆம், எம், ஏம், என்,  ஏனும்,  அன், ஆனும்,  அள்,   ஆளும், அர்,
ஆரும், அகரமும்,  தகர உகரமும் ஆகிய பதினான்கும் முக்காலத்தாற்
சிறந்தன. முற்று இருபத்தொன்பதின்கண் டகர உகரம்   வினைக்குறிப்பு
ஆதலின், அதுவும் முக்காலத்தாற்  சிறந்ததாம். ஆகத் தெரிநிலைமுற்று
இருபத்தெட்டுங் காண்க. 

யார்     எவன்  என்பனவோ  எனின்,  அவையும்  முப்பாற்கும்
இருபாற்கும்   பொதுவாகி  இடம்  உணர்த்தாவேனும்,  வினைக்குறிப்பு
ஆகலின், முக்காலமும் உடைய என்று உணர்க. 

இரு திணைக்கும் ஓதிய  குறிப்புவினை  பதினெட்டும்  முக்காலமும்
உடைய. 

இனி,     பொருள் உணர்த்தாது இடம் உணர்த்தும் முன்னிலையும்
வியங்கோளுமாகிய  விரவு  வினைமுற்றுக்களும்,  இடமும்  பொருளும்
உணர்த்தா    விரவு    வினைமுற்றுக்களும்,    பிரிபு   வேறுபடூஉஞ்
செய்தியவாய்   நிற்றலின்,  இடமும்  பொருளும்  உணர்த்திக்  காலங்
கொண்டே நிற்கும் என்று உணர்க. 

இவற்றுள்     ஐயும் ஆயும் இருவும் ஈரும் முக்காலத்தாற் சிறந்தன.
இகரமும்   மின்னும்   வியங்கோளும்   செய்மனவும்  எதிர்காலத்தாற்
சிறந்தன.   செய்யும்   என்பது   நிகழ்காலத்தாற்  சிறந்தது.  இன்மை
செப்பலும்   வேறு   என்   கிளவியும்   வினைக்குறிப்பு   ஆதலின்,
முக்காலத்தாற் சிறந்தன. 

இனி,  விரவுவினையுள்  வினையெச்சமும்   பெயரெச்சமும்   மேல்
கூறுதும். இவை ஈரிரண்டு ஆங்கால்