நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2273
Zoom In NormalZoom Out


‘உறையுலகென்றார்,  ஆவும் எருமையும் யாடும் இன்புறு மாற்றான்
நிலைபெறும்   அக்காட்டின்   கடவுளென்றற்கு.  ‘மைவரை’  எனவே
மழைவளந்  தருவிக்கும்  முருகவேளென்றார். இந்திரன் யாற்றுவளனும்
மழைவளனுந் தருமென்றற்குத் ‘தீம்புன’ லென்றார். திரைபொருது கரை
கரையாமல்  எக்கர்  செய்தல்  கடவுட்  கருத்தென்றற்குப் ‘பெருமண’
லென்றார்.

இனி, முல்லை  குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற முறை யென்னை?
யெனின்,  இவ்வொழுக்கமெல்லாம்  இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின்,
கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ்
செய்தல்  மகளிரது  இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது.
எனவே,முல்லையென்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று, ‘‘முல்லை
சான்ற முல்லையம் புறவின்’’
என்பவாகலின்.புணர்தலின்றி இல்லறம்
நிகழாமையிற்   புணர்தற்   பொருட்டாகிய  குறிஞ்சியை  அதன்பின்
வைத்தார்.   இதற்குதாரணம்,   ‘‘கருங்காற்  குறிஞ்சி  சான்றவெற்
பணிந்து’’
  என்பது.  புணர்ச்சிப்பின்  ஊடல் நிகழ்தலின்  அதன்பின்
மருதத்தை வைத்தார். ‘‘மருதஞ்   சான்ற   மருதத்   தண்பணை’’
என்புழி,   மருதமென்றது   ஊடியுங்  கூடியும்  போகம்   நுகர்தலை.
பரத்தையிற் பிரிவு போலப் பிரிவொப்புமை     நோக்கி   நெய்தலை
ஈற்றுக்கண்வைத்தார்.  நெய்தற்  பறையாவது  இரங்கற்  பறையாகலின்
நெய்தல் இரக்கமாம்.

‘‘ஐதகலல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார் நெடுங்கடை யானே’’    (புறம்.389)

என வரும்.

இனி,     இவ்வாறன்றி  முல்லை முதலிய பூவாற் பெயர் பெற்றன
இவ்வொழுக்கங்களெனின்,  அவ்வந்  நிலங்கட்கு  ஏனைப்  பூக்களும்
உரியவாகலின்  அவற்றாற் பெயர் கூறலும் உரியவெனக் கடாயினாற்கு
விடையின்மை உணர்க.

இதனானே    நடுவுநிலைத்திணை யொழிந்த நான்கற்கும் பெயரும்
முறையுங்   கூறினான்.   இந்நான்கும்  உரிப்பொருளாதல்  ‘புணர்தல்
பிரிதல்’   (14) என்புழிக்  கூறுதும்.  கருப்பொருளாகிய  தெய்வத்தை
முதற்பொருளொடு கூறியது, அவை ‘வந்த நிலத்தின் பயத்த’ வாய் (19)
மயங்குமாறு  போல மயங்காது இது வென்றற்கும், கருப்பொருளுடைத்
தெனப்பட்ட பாலைக்குத் தெய்வத்தை விலக்குதற்கு மென்றுணர்க.

உ-ம்:

‘‘வன்புலக் காட்டுநாட் டதுவே’’              (நற். 59)

எனவும்,

‘‘இறும்புபட் டிருளிய விட்டருஞ் சிலம்பிற்...