நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2280
Zoom In NormalZoom Out


அவை  குறைய  வருதலும்  உரையிற் கொள்க. என்னை? சுரத்தருமை
அறியின்,  இவள்,  ஆற்றாளாமெனத்   தலைவன்  செலவழுங்குதலுந்,
துணிந்து  போதலும், உடன்போவலெனத் தலைவி கூறுதலும், அதனை
அவன்  விலக்கலும்,  இருந்திரங்கலும் போல்வன பலவும்  முடியவரும்
நிலங்    குறிஞ்சியும்    முல்லையுமாகலின்.   சுரத்தருமை   முதலிய
நிகழாமையின்     மருதமும்     நெய்தலும்    அப்பொருண்முடிறய
வாராவாயின.

‘‘நன்றே காதலர் சென்றஆறே
அணிநிற இரும்பொறை மீமிசை
மணிநிற வுருவின தோகையுமுடைத்தே.’’    (ஐங்குறு.431)

இது     சுரத்தருமை  நினைந்து  வருந்தினேனென்ற  தலைவிக்கு
அவ்வருத்தம்    நீங்கக்   கார்கால   மாயிற்றென்று   ஆற்றுவித்தது.
இப்பாட்டு முதலிய பத்தும் முல்லையுட் பாலை.

‘‘கார்செய் காலையொடு கையறப் பிரிந்தோர்
தேர்தரு விருந்தின் தவிர்குதல் யாவது
மாற்றருந் தானை நோக்கி
ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே.’’ (ஐங்குறு.451)

இது பருவங்கண்டு ஆற்றாளாகிய தலைவி பாசறைச் செய்தி கேட்டு
வருந்தியது.

மேற்கூறிய பருவங்கண்டு  கிழத்தியுரைத்த இப்பத்தும்  முல்லையுட்
பாலை.

‘‘கருங்கால வேங்கை மாத்தகட்டு ஒள்வீ
இருங்கல் வியலறை வரிப்பத் தாஅ
நன்மலை நாடன் பிரிந்தென
ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய்.’’
                                   
(ஐங்குறு.219)

இது  வரைவிடைவைத்துப் பிரந்துழித்  தலைவி யாற்றாமை கண்டு
தோழி கூறியது. இது குறிஞ்சியுட் பாலை.

‘‘எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத்
துவலைத் தண்டுளி வீசிப்
பசலை செய்தன பனிபடு துறையே.’’        (ஐங்குறு.141)

இது  வரைவிடைவைத்துப்  பிரிந்துழி  ஆற்றுவிக்குந்  தோழிக்குத்
துறை  யின்பமுடைத்தாகலான்  வருத்திற்றெனத் தலைவி கூறியது. இது
சுரத்தருமை  முதலியனவின்றி   நெய்தற்குட்  பாலை வந்தது. ஏனைய
வந்துழிக் காண்க.

முந்நீர்     வழக்கஞ்  சிறுபான்மையாகலின்   நெய்தற்கு   முடிய
வாராதாயிற்று.    இக்கருத்தானே    பிரிவொழுக்கம்   மருதத்திற்கும்
நெய்தற்குஞ் சிறுபான்மையாகப் புலனெறிவழக்கஞ் செய்யப்படும்.

எற்பாட்டுக்கு     முன்னர்த்தாகிய  நண்பகலைப்  பலைக்குக் கூற
வேண்டிப்  பின்  வைத்தாரேனும்  பெரும்பொழுதிற்கு  முற்கூறுதலின்
ஒருவாற்றாற்  சிறுபொழுதாறும்  முறையே வைத்தாராயிற்று. காலையும்
மாலையும்  நண்பகலன்ன கடுமைகூரச் சோலை தேம்பிக் கூவன் மாறி,
நீரும் நிழலும் இன்றி, நிலம் பயந் துறந்து,