|
இது முறையானே இறுதிநின்ற பெருந்திணை யிலக்கணங் கூறுகின்றது.
(இ-ள்.)
ஏறிய மடற்றிறம் - மடன்மா கூறுதலன்றி மடலேறுதலும்; இளமை தீர் திறம் - தலைவற்கு இளையளாகாது ஒத்த பருவத்தாளாதலும்; தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம் - இருபத்து நான்காம் மெய்ப்பாட்டின் நிகழ்ந்து ஏழாம் அவதிமுதலாக வரும் அறிவழி குணன் உடையளாதலும்; மிக்க காமத்து மிடலொடு தொகைஇ - காமமிகுதியானே எதிர்ப்பட்டுழி வலிதிற் புணர்ந்த இன்பத்தோடே கூட்டப்பட்டு; செப்பிய நான்கும் - கந்திருவத் துட்பட்டு வழீஇயிற்றாகச் செப்பிய இந்நான்கும், பெருந்திணைக் குறிப்பே - பெருந்திணைக் கருத்து எ-று.
மடன்மா
கூறுதல் கைக்கிளையாம். மடற்றிறமென்றதனான் அதன் திறமாகிய வரைபாய்தலுங் கொள்க. இளமைதீர்திறம் என்றதனாற் றலைவன் முதிர்ச்சியும், இருவரும் முதிர்ந்த பருவத்துந் துறவின்பால் சேறலின்றிக் காமம்நுகர்தலும் கொள்க. காமத்து மிகுதிறம் என்றனாற் சிறிது தேறப்படுதலுங் கொள்க.
இவை கந்தருவத்துட் படாஅ வழீஇயின. இவற்றுள் ஏறிய மடற்றிறமுங் காமத்துமிகுதிறமும் புணர்ச்சிப்பின் நிகழ்வனவாம்; அது, ‘‘மடன்மா
கூறுமிடனுமா ருண்டே’’ (தொல். பொ. கள. 11)
என்பதனான் ஏறுவல் எனக் கூறிவிடாதே ஏறுதலாம்.
உ-ம்:
‘‘சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும் பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல் சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த சான்றீர் உமக்கொன் றறிவுறுப்பென் மான்ற துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென் நெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டு துஞ்சே னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின் பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தெ னெவ்வநோய் தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது பாடுவென் பாய்மா நிறுத்து; யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப மாமேலே நின்று மடல்புணையா நீந்துவேன்
|