நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2407
Zoom In NormalZoom Out


பாழி கொள்ளு மேமத் தானுங்
களிறெறிந் தெதிர்ந்தோர் பாடுங் களிற்றொடு
பட்ட வேந்தனை யட்ட வேந்தன்
வாளோ ராடு மமலையும் வாள்வாய்த்து
இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும்
ஒருவரு மொழியாத் தொகை நிலைக்கண்ணுஞ்
செருவகத் திறைவன் வீழ்ந்தெனச் சினைஇ
ஒருவன்மண்டிய நல்லிசை நிலையும்
பல்படை யொருவற் குடைதலின் மற்றவன்
ஒள்வாள் வீசிய நூழிலு முளப்படப்
புல்லித் தோன்றும் பன்னிரு துறைத்தே.
 

இது   மைந்து    பொருளாகிய    தும்பைத்திணைக்குத்    துறை
இனைத்தென்கிறது.

(இ-ள்.)  தானை யானை குதிரை என்ற நோனார் உட்கும் மூவகை
நிலையும்   -   தானைநிலை   யானைநிலை   குதிரைநிலை   என்று
சொல்லப்பட்ட  போர்செய்தற்கு ஆற்றா அரசர் தலைபனிக்கும் மூன்று
கூறுபாட்டின்கண்ணும்;

நோனார் உட்குவரெனவே நோன்றார் உட்காது நிற்பாராயிற்று.அவர்
போர்கண்டு    சிறப்புச்செய்யும்   தேவரும்  பிணந்தின்   பெண்டிரும்
படையாளர்    தாயரும்  அவர்  மனைவியருங்  கூத்தரும்  பாணரும்
பொருநரும் விறலியருங் கண்டோரும் பிறரு மென்று கொள்க.

துறக்கம்புகு  வேட்கையுடைமையிற்   காலாளை  முற்கூறி,  அதன்
பின்னர்  மதத்தாற்  கதஞ்சிறந்து  தானும் போர்செய்யும்  யானையைக்
கூறி,   மதஞ்சிறவாமையிற்   கதஞ்சிறவாத   குதிரையை    அதன்பிற்
கூறினார்.  குதிரையானன்றித்  தேர்  தானே  செல்லாமையிற் றேர்க்கு
மறமின்றென்று அது கூறாராயினார்.

‘நிலை’  யென்னாது  ‘வகை’  யென்றதனான் அம்மூன்று நிலையுந்
தாமே   மறஞ்சிறப்பப்   பொருதுவீழ்தலும்,  அரசனேவலின்  தானை
பொருது    வீழ்தலும்,   யானையுங்   குதிரையும்   ஊர்ந்தாரேவலிற்
பொருதலும்,  படையாளர்  ஒருவரொருவர்  நிலை கூறலும் அவர்க்கு
உதவலுமென இப்பகுதியெல்லாங் கொள்க.

இனி  தாயர்   கூறுவன  மூதின்முல்லையாம்; மனைவியர் கூறுவன
இல்லாண்முல்லையாம்;   கண்டோர்  கூறுவன  வல்லாண்முல்லையாம்;
பாணர் கூறுவன பாண்பாட்டாம் என்க.

இவை  கூறி  ஏனைக் கூத்தர் முதலியோர் கூறுவன கூறார். மனம்
ஞெகிழ்ந்து  போவாரு முளர். அவை ஓரொரு துறையாக முதனூற்கண்
வழங்காமையானும்   அவற்றிற்கு  வரையறை  யின்மையானும்  இவர்
தானைநிலையென அடக்கினார். இச்சிறப்பான் இதனை முற்கூறினார்.