| அமலை யென்பதூஉம்
அப்பொருட்டாயிற்று.
உ-ம்:
‘‘ஆளுங் குரிசி லுவகைக் களவென்னாம் கேளன்றிக் கொன்றாரே கேளாகி - வாள்வீசி யாடினா ரார்த்தா ரடிதோய்ந்த மண்வாங்கிச் சூடினார் வீழ்ந்தானைச் சூழ்ந்து’’
என வரும்.
‘‘நான்மருப் பில்லாக் கானவில் யானை வீமன் வீழ்த்திய துடன்றெதிர்ந் தாங்கு மாமுது மதுரை மணிநிறப் பாகனோ டாடமர் தொலைத்த லாற்றான் றேரொடு மைத்துனன் பணியின் வலமுறை வந்து கைத்தலங் கதிர்முடி யேற்றி நிற்றந் திறைஞ்சின னைவர்க் கிடையோ னதுகண்டு மறந்தீர் மன்னனு மிறைஞ்சித் தனாது வேழம் விலக்கி வினைமடிந் திருப்பச் சூர்மருங் கறுத்த நெடுவேள் போல மலைபுரை யானையுந் தலைவனுங் கவிழிய வாளுகு களத்து வாள்பல வீசி யொன்னா மன்னரு மாடினர் துவன்றி யின்னா வின்ப மெய்தித் தன்னமர் கேளிரு முன்னார்த் தனரே.’’
இப் பாரதப்பாட்டும் அது.
வாள் வாய்த்து
இருபெரு வேந்தர் தாமுஞ் சுற்றமும் ஒருவரும் ஒழியாத் தொகைநிலைக்கண்ணும் -
இருபெருவேந்தர்தாமும் அவர்க்குத் துணையாகிய
வேந்தருந் தானைத்தலைவருந் தானையும் வாட்டொழின் முற்றி
ஒருவரும் ஒழியாமற் களத்து வீழ்ந்த தொகைநிலைக்கண்ணும்;
உ-ம்:
‘‘வருதார் தாங்கி யமர்மிகல் யாவது பொருதாண்டொழிந்த மைந்தர் புண்டொட்டுக் குருதிச் செங்கைக் கூந்த றீட்டி நிறங்கிள ருருவிற் பேஎய்ப் பெண்டி ரெடுத்தெறி யனந்தர்ப் பறைச்சீர் தூங்கப் பருந்தருந் துற்ற தானையொடு செருமுனிந்து மறத்தின் மண்டிய விறற்போர் வேந்தர் தாமாய்ந்த னரே குடை துளங் கினவே யுரைசால் சிறப்பின் முரசொழிந் தனவே பன்னூ றடுக்கிய வேறுபடு பைஞ்ஞில மிடங்கெட வீண்டிய வியன்கட் பாசறை களங்கொளற் குரியோ ரின்றித் தெறுவர வுடன்வீழ்ந் தன்றா லமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே வாடாப் பூவி னிமையா நாட்டத்து நாற்ற வுணவி னோரு மாற்ற வரும்பெற லுலக நிறைய விருந்துபெற் றனரால் பொலிகநும் புகழே’’
(புறம்.62)
என வரும்.
செருவகத்து இறைவன்
வீழ்ந்தெனச் சினைஇ ஒருவன் மண்டிய நல்லிசை நிலையும் - போரிடத்தே தன்வேந்தன் வஞ்சத்தாற் பட்டனாகச்சினங் கொண்ட மனத்தனாய்ப்
பெரும்படைத் தலைவன் தலைமயங்கிப் பொருத நல்ல புகழைப்
பெற்ற நிலைமைக் கண்ணும்;
அது குருகுல வேந்தனைக் குறங்கறுத்தஞான்று இரவு
ஊரெறிந்து
|