நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2436
Zoom In NormalZoom Out


நன்னெறியினை யுடைத்துக் காஞ்சி எ-று.

எனவே,  வீடுபேறு  நிமித்தமாகப்   பல்வேறு   நிலையாமையைச்
சான்றோர் சாற்றுங் குறிப்பினது காஞ்சியாயிற்று. பாங்கு. துணை.

உலகிற்கு  நிலையாமை  கூறுங்கால்  அறமுதலாகிய பொருட்பகுதி
ஏதுவாகக்    கூறினன்றி   உலகென்பதற்கு   வடிவு   வேறின்மையிற்
‘பல்லாற்றானு’மென்று    ஆன்    உருபு   கொடுத்தார்.   கெடுங்காற்
கணந்தோறுங்  கெடுவனவுங்  கற்பந்தோறுங் கெடுவனவுமா மென்றற்கு
ஆறென்றார்.   நிலைபெற்ற   வீட்டினான்   இவற்றின்   நிலையாமை
யுணர்தலின்     வீடு     ஏதுவாயிற்று.    பல்லாற்றானுமென்றதனாற்
சில்லாற்றானும்  வீடேது வாகலன்றி நிலையாமைக் குறிப்பு ஏதுவாகலுங்
கொள்க.    இஃது   அறிவன்   தேயமுந்   தாபதப்பக்கமும்   பற்றி
நிலையின்மைக் குறிப்புப் பெற்றாம்.

உ-ம்:

‘‘மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக
வியங்கிய விருசுடர் கண்ணெனப் பெயரிய
வளியிடை வழங்கா வழக்கரு நீத்தம்
வயிரக் குறட்டின் வயங்குமணி யாரத்துப்
பொன்னந் திகிரி முன்சமத் துருட்டிப்
பொருநர்க் காணாச் செருமிகு மொய்ம்பின்
முன்னோர் செல்லவுஞ் சொல்லா தின்னும்
விலைநலப் பெண்டிரிற் பலர்மீக் கூற
வுளனே வாழியர் யானெனப் பன்மா
ணிலமக ளழுத காஞ்சியு
முண்டென வுரைப்பரா லுணர்ந்திசி னோரே’’   (புறம்.365)

இதனுள்   ‘உண்டென  உரைப்பரால்   உணர்ந்தோ’   ரென்றலின்
வீடுபேறு   ஏதுவாகத்   தாபதர்   போல்வார்க்கு   நில்லா   உலகம்
புல்லியதாயிற்று.   வீடுபேறு   நிமித்தமாகச்   சான்றோர்    பல்வேறு
நிலையாமையை அறைந்த மதுரைக்காஞ்சி இதற்கு உதாரணமாம்.   (23)

நிலையின்மைப் பொருள்களை வகுத்தோதுதல்
 

79,மாற்றருங் கூற்றஞ் சாற்றிய பெருமையுங்
கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய முதுமையும்
பண்புற வரூஉம் பகுதி நோக்கிப்
புண்கிழித்து முடியு மறத்தி னானும்
ஏமச் சுற்ற மின்றிப் புண்ணோற்
பேஎ யோம்பிய பேஎய்ப் பக்கமும்
இன்னனென் றிரங்கிய மன்னை யானும்
இன்னது பிழைப்பி னிதுவா கியரெனத்
துன்னருஞ் சிறப்பின் வஞ்சினத் தானும்
இன்னகை மனைவி பேஎய்ப் புண்ணோன்
துன்னுதல் கடிந்த தொடாஅக் காஞ்சியும்
நீத்த கணவற் றீர்த்த வேலிற்
பேஎத்த மனைவி யாஞ்சி யானும்
நிகர்த்து மேல்வந்த வேந்தனொடு முதுகுடி
மகட்பா டஞ்சிய