நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2453
Zoom In NormalZoom Out


குறிப்பின்கண் வந்த செந்துறைப் பாடாண்பாட்டு.

இது  முனிவர்  கூறுமாறு  போலக்  கூறிப் பரவலும் புகழ்ச்சியுங்
கூறாது  மறுமைப்பயன்  பிறர்க்குறுதி  பயப்பக் கூறலிற் கைக்கிளைப்
புறனாய்ப் பாடாணாயிற்று.

இவை  செந்துறை   மார்க்கத்து வண்ணப்பகுதியாகிய பாடல் பற்றி
வருமென்பதூஉம் வெண்டுறை மார்க்கமாகிய நாடகத்துள் அவிநயத்துக்
குரியவாகி  வருமென்பதூஉங்  கூறின், அவை ஈண்டுக் கூறல் மயங்கக்
கூறலாம்.   அன்றியும்  ஏனை  அறுவகைத்  திணைக்கும்  இங்ஙனங்
கூறாது இத்திணைக்கே உரித்தாகக் கூறுதற்கொரு காரணமின்மையானும்
அங்ஙனங்  கூறாரென்ப. பரவலும் புகழ்ச்சியும் அவ்வப்  பொருண்மை
கருதினாரைத்     தலைவராக     வுடைமையானும்,       ஏனையது
அக்குறிப்பிற்றன்   றாகலானும்,   அதற்குப்   பாட்டுடைத்   தலைவர்
பலராயினும்  ஒருவராயினும் பெயர்கொடுத்துங் கொடாதுங்  கூறலானும்
வேறு   வைத்தாரென்க.  இத்துணை  வேறுபாடுடையதனைப்   பரவல்
புகழ்ச்சியொடு     கூடவைத்தார்,    அவை    முன்னோர்    கூறிய
குறிப்பினுள்ளும்   விராய்வரும்   என்றற்கு.   இன்னும்   அதனானே
பாடாண்டிணைப்  பொருண்மை  மயங்கிவரினும்  முடிந்த  பொருளாற்
பெயர் பெறுமென்று கொள்க.

‘‘நிலமிசை வாழ்நர்’’ என்னும் (43) புறப்பாட்டுப் புலவன் அரசனை
வைது   ஆறியது  நன்குரைத்தல்.  அஃது  இயற்கை  வகையானன்றிச்
செயற்கை   வகையாற்   பரவலும்  புகழ்ச்சியுந்  தொடர்ந்த முன்னோர்
கூறிய குறிப்பு.

இன்னும் மயங்கி வருவனவெல்லாம் இதனான் அமைக்க.       (27)

எய்தியதன்மேற் சிறப்புவிதி
 

83.காமப் பகுதி கடவுளும் வரையார்
ஏனோர் பாங்கினு மென்மனார் புலவர்.
 

இது முற்கூறிய கடவுட்கும் மக்கட்கும்  எய்தியதன்மேற் சிறப்புவிதி
கூறுகின்றது.

(இ-ள்.) காமப்பகுதி - முன்னர்ப் ‘புரைதீர் காம’ (தொல்.புறம். 26)
மென்றதனுட்  பக்குநின்ற  புணர்ச்சி  வேட்கை;   கடவுள்  பாங்கினும்
வரையார் - கட்புலனாகிய கடவுளிடத்தும் நீக்கார்;  ஏனோர் பாங்கினும்
வரையார்  என்மனார்  புலவர் - மக்களிடத்தும்  நீக்காரென்று கூறுவர்
புலவர் எ-று.

பகுதி  ஆகுபெயர்.   அது   கடவுண்மாட்டுக்   கடவுட்பெண்டிர்
நயப்பனவும்,  அவர்மாட்டு  மானிடப்பெண்டிர் நயப்பனவுங், கடவுண்
மானிடப்பெண்டிரை நயப்பனவும் பிறவுமாம்.

இன்னும் ‘பகுதி’ யென்றதனானே எழுதிணைக்குரிய காமமுங்