நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2461
Zoom In NormalZoom Out


அளவேயாமென் றுணர்க.

உ-ம்:

‘‘மாவாடியபுலம் நாஞ்சிலாடா
கடாஅஞ் சென்னிய கடுங்கண் யானை
யினம்பரந்தபுலம் வளம்பரப்பறியா
நின்படைஞர், சேர்ந்த மன்றங் கழுதை போகி
நீ, யுடன்றோர் மன்னெயி றோட்டி வையா
கடுங்கா லொற்றலிற் சுடர்சிறந் துருத்துப்
பசும்பிசி ரொள்ளழ லாடிய மருங்கின்
ஆண்டலை வழங்குங் கானுணங்கு கடுநெறி
முனையகன் பெரும்பா ழாக மன்னிய
வுருமுறழ் பிரங்கு முரசிற் பெருமலை
வரையிழி யருவியி னொளிறுகொடி நுடங்கக்
கடும்பரிக் கதழ்சிற ககைப்பநீ
நெடுந்தே ரோட்டியபிற ரகன்றலை நாடே’’   (பதிற்றுப்.25)

இது  புலவன்  பொருணச்சிக்   கூறலிற்   பாடாண்கொற்றவள்ளை.
‘வல்லாராயினும் வல்லுந ராயினும்’ (57) ‘காலனுங் காலம்’ (41) என்னும்
புறப்பாட்டுக்களும் அது.

மக்கட் பாடாண்டிணைக்குரிய துறைகளாவன
 

90.கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தலும்
அடுத்தூர்ந் தேத்திய வியன்மொழி வாழ்த்துஞ்
சேய்வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க் குரைத்த கடைநிலை யானுங்
கண்படை கண்ணிய கண்படை நிலையுங்
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
வேலி னோக்கிய விளக்கு நிலையும்
வாயுறை வாழ்த்துஞ் செவியறி வுறூஉவும்
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்துங்
கைக்கிளை வகையோ டுளப்படத் தொகைஇத்
தொக்க நான்கு முளவென மொழிப.
 

இது  முன்னிற்  சூத்திரத்து    அதிகாரப்பட்டு   நின்ற   மக்கட்
பாடாண்டிணைக் குரிய துறை கூறுகின்றது.

(இ-ள்.) கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தலும் - பிறர்க்கு
ஈவோரைப்  பிறரி  னுயர்த்துக்  கூறிப்  பிறர்க்  கீயாதாரை இழித்துக்
கூறலும்;

சான்றோர்க்குப் பிறரை  யிழித்துக் கூறற்கண்ணது தக்க தன்றேனும்
நன்மக்கள்  பயன்பட  வாழ்தலுந்  தீயோர்  பயன்படாமல் வாழ்தலுங்
கூறக்கேட்டு  ஏனையோரும்  பயன்பட  வாழ்தலை விரும்புவரென்பது
பயப்பக்  கூறலின் இவர்க்கு இங்ஙனங் கூறுதல் தக்கதாயிற்று. இதனை
ஏத்தலும் பழித்தலும் ஏத்திப் பழித்தலுமென மூவகையாகக் கொள்க.

உ-ம்:

‘‘தடவுநிலைப் பலவி னாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக்கை விறலியர் படப்பைப் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாஞ்சில
அரிசி வேண்டினே மாகத் தான்பிற
வரிசை யறிதலிற் றன்னுந் தூக்கி
யிருங்கடறு வளைஇய குன்றத் தன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே யன்னதோர்
தேற்றா வீகையு முளதுகொல்
போற்றா ரம்ம பெரியோர்தங் கடனே’’        (புறம்.140)

இது கொடுப்போர் ஏத்தியது.

‘‘பாரி பாரி யென்றுபல வேத்தி
யொருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி யொருவனு மல்லன்
மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே’’         (புறம்.107)

என்பதுவும் அது.

‘‘ஒல்லுவ தொ