நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2465
Zoom In NormalZoom Out


சில் வாழ்க்கைப்
பரிசிலர்க் கடையா வாயி லோயே
கடுமான் றோன்றல் நெடுமா னஞ்சி
தன்னறி யலன்கொ லென்னறி யலன்கொல்
அறிவும் புகழு முடையோர் மாய்ந்தென
வறந்தலை யுலகமு மன்றே யதனாற்
காவினெங் கலனே சுருக்கினெங் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
யெத்திசைச் செலினு மத்திசைச் சோறே’’      (புறம்.206)

இது  தலைவனை எதிர்ப்பட்டுக் கூறாது  வாயிலோனை  நோக்கிக்
கூறலின் பரிசில் கடாயதின்றாம்.

ஆண் அசை;  ஏழனுருபாக்கி  எல்லாவற்றிற்கும் விரித்தலுமொன்று.

கண்படை  கண்ணிய   கண்படைநிலையும்.  அரசரும்  அரசரைப்
போல்வாரும்   அவைக்கண்   நெடிது   வைகியவழி   மருத்துவரும்
அமைச்சரும்  முதலியோர்  அவர்க்குக் கண்டுயில்கோடலைக்  கருதிக்
கூறிய கண்படை நிலையும்;

‘கண்படை  கண்ணிய’  என்றார்,    கண்படை   முடிபொருளாக
இடைநின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு.

உ-ம்:

‘‘வாய்வாட் டானை வயங்குபுகழ்ச் சென்னிநின்
னோவா வீகையி னுயிர்ப்பிடம் பெறாஅர்
களிறுகவர் முயற்சியிற் பெரிது வருந்தினரே
யுலகங் காவலர் பலர்விழித் திருப்ப
வறிது துயில் கோடல் வேண்டுநின்
பரிசின் மாக்களுந் துயில்கமா சிறிதே’’

என வரும்.

கபிலை கண்ணிய வேள்வி  நிலையும் -  சேதாவினைக் கொடுக்கக்
கருதிய கொடைநிலை கூறுதலும்;

இது    வரையா    ஈகையன்றி   இன்னலுற்றாற்   கொடுக்கவென
உயர்ந்தோர்   கூறு   நாட்காலையிலே   கொடுப்பதாமாதலின்  வேறு
கூறினார்.    ‘கண்ணிய’    என்றதனாற்    கன்னியர்   முதலோரைக்
கொடுத்தலுங் கொள்கை.

‘‘பொன்னிறைந்த பொற்கோட்டுப் பொற்குளம்பிற் கற்றாதந்
தின்மகிழா னந்தணரை யின்புறுப்பச் சென்னிதன்
மாநிலமே யானுலகம் போன்றது வான்றுகள்போர்த்
தானுலக மண்ணுலகா மன்று’’

வேலின்    ஓக்கிய   விளக்கு  நிலையும் - வேலும் வேற்றலையும்
விலங்காதோங்கியவாறு   போலக்   கோலொடு   விளக்கும்   ஒன்று
பட்டோங்குமாறு ஓங்குவித்த விளக்குநிலையும்.

இன்:   உவமப்பொருள்.  இது  கார்த்திகைத் திங்களிற் கார்த்திகை
நாளின்  ஏற்றிய  விளக்குக்  கீழும்மேலும்  வலமுமிடமுந்  திரிபரந்து
சுடர்ஓங்கிக்      கொழுந்துவிட்டெழுந்ததென்று     அறவோராக்கங்
கூறப்படுவதாம்.

உ-ம்:

‘மைமிசை யின்றி மணிவிளக்குப் போலோங்கிச்
செம்மையி னின்றிலங்குந் தீபிகை - தெம்முனையுள்
வேலினுங் கோடாது