|
ஐந்திணைப் புறத்தவாகிய வெட்சி முதலியவற்றிற்கும் அன்பொடு
புணர்தலுங் கொள்ளப்படும்.
“அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதேதுணை” (குறள். 76)
என்றலின்.
கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக் கற்பின்றிக்
களவே அமையாதென்றற்குத் “துறையமை” என்றார். (1)
காமக் கூட்டத்திற்குரியாரியல்பும் அவரெதிர்ப்பாட்டிற்குரிய
காரணமும் இவையெனல்
93. ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை யின்றே.
இது, முற்கூறிய காமக்கூட்டத்திற்கு உரிய கிழவனுங் கிழத்தியும்
எதிர்ப்படும் நிலனும் அவ்வெதிர்ப்பாட்டிற்குக் காரணமும் அங்ஙனம் எதிர்ப்படுதற்கு உரியோர் பெற்றியுங் கூறுகின்றது.
(இ-ள்.)
ஒன்றே வேறே என்ற இரு பால்வயின் - இருவர்க்கும்
ஓரிடமும் வேற்றிடமும் என்று கூறப்பட்ட இருவகை நிலத்தின் கண்ணும்; ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின் - உம்மைக் காலத்து எல்லாப் பிறப் பினும் இன்றியமையாது உயிரொன்றி ஒருகாலைக் கொருகால் அன்பு முதலியன சிறத்தற்கு ஏதுவாகிய பால்வரை தெய்வத்தின் ஆணையாலே, ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப - பிறப்பு முதலியன பத்தும் ஒத்த தலைவனுந் தலைவியும் (273) எதிர்ப்படுப; மிக்கோன் ஆயினும் கடி வரை இன்றே - அங்ஙனம் எல்லாவாற் றானு ஒவ்வாது தலைவன் உயர்ந் தோனாயினுங் கடியப்படாது எ-று.
‘என்றிரு பால்வயிற் காண்ப’ எனப் பால் வன்பால் மென்பால் போல
நின்றது. உயர்ந்த பாலை “நோய் தீர்ந்த மருந்து” போற் கொள்க. ஒரு நிலம் ஆதலை முற்கூறினார், இவ்வெழுக்கத்திற்கு ஓதியது குறிஞ்சி நிலமொன்றுமே ஆதற்சிறப்பு நோக்கி. வேறு நிலம் ஆதலைப் பிற் கூறினார், குறிஞ்சி தன்னுள்ளும் இருவர்க்கும் மலையும் ஊரும் வேறாதலுமன்றித் திணை மயக்கத்தான் மருதம் நெய்தலென்னும் நிலப்பகுதியுள் ஒருத்தி அரிதின் நீங்கிவந்து எதிர்ப்படுதல் உளதாதலுமென வேறுபட்ட பகுதி பலவும் உடன்கோடற்கு ஒரு நிலத்துக் காமப்புணர்ச்சிப் பருவத்தாளாயினாளை ஆயத்தின் நீங்கித் தனித்து ஓரிடத்து எளிதிற் காண்டல் அரிதென்றற்குப் ‘பால தாணையிற் காண்ப’ என்றார். எனவே, வேற்று நிலத்திற்காயின் வேட்டை மேலிட்டுத் திரிவான் அங்ஙனந் தனித்துக் காணுங் காட்சி அருமையாற் பால தாணை வேண்டுமாயிற்று.
|