நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2488
Zoom In NormalZoom Out


 

தலைமக்கள் உணர்ப.

(இ-ள்.)  வண்டே - பயின்றதன்மே லல்லது செல்லாத தாது ஊதும்
வண்டு; இழையே - ஒருவரான் இழைக்கப்பட்ட அணிகலன்கள்; வள்ளி
-  முலையினுந்  தோளினும்  எழுதுந்  தொய்யிற்கொடி; பூவே - கைக்
கொண்டு   மோந்து   உயிர்க்கும்   கழுநீர்ப்பூ;   கண்ணே  -  வான்
கண்ணல்லாத  ஊண்  கண்;  அலமரல்  -  கண்டறியாத  வடிவுகண்ட
அச்சத்தாற்  பிறந்த  தடு  மாற்றம்; இமைப்பே - அக்கண்ணின் இதழ்
இமைத்தல்;  அச்சம்  -  ஆண் மகனைக் கண்டுழி மனத்திற் பிறக்கும்
அச்சம்;  என்று  அன்னவை  பிறவும்  -  என்று  அவ்வெண்வகைப்
பொருளும்  அவைபோல்வன பிறவும்; அவண் நிகழ நின்றவை - அவ்
வெதிர்ப்பாட்டின்கண்   முன்பு   கண்ட   வரையர   மகள்  முதலிய
பிழம்புகளாய்  ஈண்டுத்  தன்  மனத்து நிகழ நின்ற அப் பிழம்புகளை;
ஆங்குக்  களையும்  கருவி  என்ப - முந்து நூற்கண்ணே அவ்வையம்
நீக்குங் கருவியாமென்று கூறுவர் ஆசிரியர் எ-று.

எனவே,   ‘எனக்கும்   அது   கருத்’தென்றார்.   இவையெல்லாம்
மக்கட்குரியனவாய்  நிகழவே தெய்வப்பகுதிமேற் சென்ற ஐயம் நீங்கித்
துணியும் உள்ளம் பிறத்தலின் துணிவும் உடன் கூறிற்றே யாயிற்று.

இனி,  ‘அன்னபிற’  ஆவன  கால்  நிலந்தோய்தலும்   நிழலீடும்
வியர்த்தலும் முதலியன.

“திருநுதல் வேரரும்புந் தேங்கோதை வாடும்
இருநிலஞ் சேவடியுந் தோயும் - அரிபரந்த
போகிதழ் உண்கணு மிமைக்கும்
ஆகு மற்றிவள் அகலிடத் தணங்கே”
                             (புற.வெ.மாலை.கைக்.3)

என வரும்.

இக்  காட்சி     முதலிய      நான்கும்    அகனைந்திணைக்குச்
சிறப்புடைமையும்  இவை  கைக்கிளையாமாறும் ‘முன்னைய நான்கும்’
(தொல்.பொ.52)
 என்புழிக்  கூறினாம்.   இங்ஙனம்  ஐயந்தீர்ந்துழித்
தலைவியை வியந்து கூறுதலுங் கொள்க.                      (4)

வழிநிலைக்காட்சி இதுவெனல்

96. நாட்டம் இரண்டும் அறிவுடம் படுத்தற்குக்
கூட்டி யுரைக்குங் குறிப்பரை யாகும்.

இஃது  அங்ஙனம்  மக்களுள்ளாளெனத்  துணிந்து நின்ற தலைவன்
பின்னர்ப்  புணர்ச்சி  வேட்கை  நிகழ்ந்துழித்  தலைவியைக் கூடற்குக்
கருதி  உரை  நிகழ்த்துங்காற்  கூற்று மொழியான் அன்றிக் கண்ணான்
உரை நிகழ்த்து மென்பதூஉம் அது கண்டு தலைவியும் அக்கண்ணானே
தனது  வேட்கை புலப்படுத்திக் கூறுமென்பதூஉங் கூறுகின்றது; எனவே
இது புணர்ச்சி நிமித்தமாகிய வழிநிலைக்காட்சி கூறுகின்றதாயிற்று.

(இ-ள்.) அறிவு - தலைவன் அங்ஙனம் மக்களுள்ளாளென்று அறிந்த
அறிவானே;    உடம்படுத்தற்கு    -    தலைவியைக்   கூட்டத்திற்கு
உடம்படுத்தற்கு;  நாட்டம்  இரண்டும் கூட்டி உரைக்கும் - தன்னுடைய
நோக்கம் இரண்டானுங்