நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2489
Zoom In NormalZoom Out


 

கூட்டி  வார்த்தை  சொல்லும்;  குறிப்புரை நாட்டம் இரண்டும் ஆகும்
-  அவ்வேட்கை கண்டு தலைவி தனது வேட்கை புலப்படுத்திக் கூறுங்
கூற்றுந் தன்னுடைய நோக்கம் இரண்டானுமாம் எ-று.

‘நாட்டம்  இரண்டும்’  இரண்டிடத்துங்  கூட்டுக.  உம்மை  விரிக்க.
இங்ஙனம்   இதற்குப்   பொருள்கூறல்   ஆசிரியர்க்குக்   கருத்தாதல்
‘புகுமுகம்  புரிதல்’ (தொல்.பொ.261)   என்னும்   மெய்ப்பாட்டியற்
சூத்திரத்தானுணர்க;  அதற்குப் பேராசிரியர் கூறிய உரையானுமுணர்க.
ஒன்று  ஒன்றை  ஊன்றி  நோக்குதலின்  நாட்டமென்றார். நாட்டுதலும்
நாட்டமும் ஒக்கும்.

உ-ம்:

“நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து”           (குறள்.1082)

என வரும்.

இது புகுமுகம் புரிதல் என்னும் மெய்ப்பாடு கூறியது.          (5)

புணர்ச்சியமைதி இவற்றான்நிகழுமெனல்

97. குறிப்பே குறித்தது கொள்ளு மாயின்
ஆங்கவை நிகழும் என்மனார் புலவர்.

இது புணர்ச்சியமைதி கூறுகின்றது.

(இ-ள்.)  குறித்தது - தலைவன் குறித்த புணர்ச்சி வேட்கை யையே;
குறிப்புக்   கொள்ளுமாயின்   -   தலைவி   கருத்துத்  திரிவுபடாமற்
கொள்ளவற்  றாயின்;  ஆங்கு  -  அக்  குறிப்பைக் கொண்டகாலத்து;
அவை  நிகழு  என்  மனார்  புலவர்  -  புகுமுகம்  புரிதன் முதலாக
இருகையுமெடுத்தல்   ஈறாகக்   கிடந்த  மெய்ப்பாடு  பன்னிரண்டனுட்
(261-263)  பொறிநுதல்  வியர்த்தல்  முதலிய  பதினொன்றும் முறையே
நிகழுமென்று கூறுவர் புலவர் எ-று.

‘அங்கவை’யும்     பாடம்.    பன்னிரண்டாம்    மெய்ப்பாடாகிய
இருகையுமெடுத்தல்   கூறவே  முயக்கமும்  உய்த்துணரக்  கூறியவாறு
காண்க.   அம்  மெய்ப்பாட்டியலுட்  கூறிய  மூன்று  சூத்திரத்தையும்
(261-263) ஈண்டுக் கூறியுணர்க.

உ-ம்:

“கண்ணொடு கண்ணிணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல.”                      (குறள்.1100)

“கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கம் காமத்திற்
செம்பாகம் அன்று பெரிது.”                (குறள்.1092)

இதனை நான்கு வருணம் ஒழிந்தோர்க்குங் கொள்க.

உ-ம்:

“பானலந் தண்கழிப் பாடறிந்து தன்ஐமார்
நூனல நுண்வலையா னொண்டெடுத்த - கானற்
படுபுலால் காப்பாள் படை நெடுங்கண் ணோக்கங்
கடிபொல்லா வென்னையே காப்பு.”       (திணை.நூற்.32)

இனி முயங்கி மகிழ்ந்து கூறுவன:

“கோடல் எதிர்முகைப் பசுவீ முல்லை
நாறிதழ்க் குவளையோ டிடைப்பட விரைஇ
ஐதுதொடை மாண்ட கோதை போல
நறிய நல்லோள் மேனி
முறியினும் வாயது முயங்கற்கும் இனிதே.”      (குறுந்.62)

“தம்மில் இருந்து தமதுபாத் துண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.”                 (குறள்.1107)