|
தாவியிற் பைப்பய நுணுகி
மதுகை மாய்தல் வேண்டும் பெரிதழிந்து
இதுகொல் வாழி தோழி யென்னுயிர்
விலங்குவெங் கடுவளி யெடுப்பத்
துலங்குமரப் புள்ளின் துறக்கும் பொழுதே.” (அகம்.71)
இவை தலைவி சாக்காடாயின. மடலேறுவலெனக் கூறுதல் மாத்திரையே தலைவற்குச் சாக்காடு. இவை சிறப்புடையவெனவே களவு சிறப்புடைத்தாம். இவை கற்பிற்கு ஆகா. இருவர்க்கும் இவை தடுமாறி வருதலின் மரபினவையெனப் பன்மை கூறினார். (9)
இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவன்கண்
நிகழ்வன இவையெனல்
101. முன்னிலை யாக்கல் சொல்வழிப் படுத்தல்
நன்னயம் உரைத்தல் நகைநனி யுறாஅது
அந்நிலை யறிதன் மெலிவுவிளக் குறுத்தல்
தந்நிலை யுரைத்தல் தெளிவகப் படுத்தலென்று
இன்னவை நிகழும் என்மனார் புலவர்.
இஃது இன்பமும் இன்ப நிலையின்மையுமாகிய புணர்தல் பிரிதல்
கூறிய முறையானே (14) இயற்கைப் புணர்ச்சி முற்கூறி அதன் பின்னர்ப் பிரிதலும் பிரிதனிமித்தமுமாய் அத்துறைப் படுவன வெல்லாந் தொகுத்துத் தலைவற்கு உரியவென்கின்றது.
(இ-ள்.)
முன்னிலையாக்கல் - முன்னிலையாகாத வண்டு நெஞ்சு
முதலியவற்றை முன்னிலையாக்கிக் கோடல்; சொல்வழிப் படுதல் - அச் சொல்லாதவற்றைச் சொல்லுவனபோலக் கூறுதல்; நன்னயம் உரைத்தல் - அவை சொல்லுவனவாக அவற்றிற்குத் தன் கழிபெருங்காதல் கூறுவானாய்த் தன்னயப்புணர்த்துதல்; நகைநனி உறாஅது அந்நிலை அறிதல் - தலைவி மகிழ்ச்சி மிகவும் எய்தாமற் புணர்ச்சிக்கினமாகிய பிரிவுநிலைகூறி அவள் ஆற்றுந்தன்மை அறிதல்; மெலிவு விளக்குறுத்தல் - இப்பிரிவான் தனக்குள்ள வருத்தத்தைத் தலைவி மனங்கொள்ளக் கூறுதலுந் தலைவி வருத்தங் குறிப்பான் உணர்ந்து அது தீரக்கூறுதலும்; தம் நிலை உரைத்தல் - நின்னொடு பட்ட தொடர்ச்சி எழுமையும் வருகின்றதெனத் தமது நிலை உரைத்தல்; தெளிவு அகப்படுத்தல் - நின்னிற் பிரியேன், பிரியின் ஆற்றேன், பிரியின் அறனல்லது செய்தேனாவலெனத் தலைவி மனத்துத் தேற்றம்படக் கூறுதல்; என்று இன்னவை நிகழும் என்மனார் புலவர் - என்று இக்கூறிய ஏழும் பயின்றுவரும் இயற்கைப் புணர்ச்சிப்பின் தலைவற்கு எ-று.
முற்கூறிய மூன்றும் நயப்பின்கூறு. இ ஃது அறிவழிந்து கூறாது
தலைவி கேட்பது காரியமாக வண்டு முதலியவற்றிற்கு உவகைபற்றிக் கூறுவது. ‘நன்னயம்’ எனவே எவரினுந்தான் காதலனாக உணர்த்தும். இதன்பயன் புணர்ச்சியெய்தி நின்றாட்கு இவன் எவ்விடத்தான் கொல்லோ
|