நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2494
Zoom In NormalZoom Out


 

இன்னும்  இது கூடுங்கொல்லோ இவன்அன்புடையன் கொல்லோ என
நிகழும்   ஐயநீங்குதல்.   இது  பிரிதனிமித்தம்.  இவன்  பிரியாவிடின்
இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாம்; ஆண்டு யாம் இறந்துபடுதலின்
இவனும்    இறந்துபடுவனெனக்    கருதப்,   பிரிவென்பதும்   ஒன்று
உண்டெனத்   தலைவன்  கூறுதல்  அவட்கு  மகிழ்ச்சியின்  றென்பது
தோன்ற    ‘நகை   நனியுறா’    தென்றார்.  ‘புணர்தல்   பிரிதல்’
(தொல்.பொ.14)
 எனக்   கூறிய  சூத்திரத்திற்  புணர்தலை  முற்கூறி
ஏனைப்   பிரிவை   அந்நிலை   யென்று   ஈண்டுச் சுட்டிக் கூறினார்.
இதனால்   தலைவிக்குப்    பிரிவு   அச்சம்   கூறினார்.    தண்ணீர்
வேட்டு    அதனை    உண்டு   உயிர்பெற்றான்,   இதனான்   உயிர்
பெற்றேமெனக் கருதி அதன்மாட்டு வேட்கை  நீங்காதவாறு    போலத்
தலைவிமாட்டு    வேட்கையெய்தி   அவளை   அரிதிற்   கூடி உயிர்
பெற்றானாதலின், இவளான் உயிர்பெற்றே மென்றுணர்ந்து,  அவன்மேல்
நிகழ்கின்ற   அன்புடனே   பிரியுமாதலின்   தலைவற்கும்  பிரிவச்சம்
உளதாயிற்று.   இங்ஙனம்    அன்பு   நிகழவும்   பிறர்   அறியாமற்
பிரிகின்றேனென்     பதனைத்      தலைவிக்கு     மனங்கொள்ளக்
கூறுமென்றற்கு   ‘விளக்குறுத்த’  லென்றார்.  இதனானே  வற்புறுத்தல்
பெற்றாம்.   அஃது   அணித்து   எம்மிட  மென்றும்  பிறவாற்றானும்
வற்புறுத்தலாம். மேலனவும் பிரிதனிமித்தம்.

உ-ம்:

“கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.”            (குறுந்.2)

இதனுள்  ‘தும்பி’  என்றது முன்னிலையாக்கல்; ‘கண்டது மொழிமோ
என்றது  சொல்வழிப்படுத்தல்;  ‘கூந்தலின் நறியவும் உளவோ’ என்றது
நன்னயமுரைத்தல்;    ‘காமஞ்    செப்பாது’   என்றது   என்னிலத்து
வண்டாதலின்   எனக்காகக்   கூறாது  மெய்  கூறெனத்  தன்  இடம்
அதுவாகக்  கூறலின்  இடமணித்தென்றது:  ‘பயிலியது  நட்பு’  என்றது
தந்நிலை யுரைத்தல்.

“பூவிடைப் படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவரி தாகிய தண்டாக் காமமோடு
உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து
இருவேம் ஆகிய வுலகத்து
ஒருவே மாகிய புன்மைநாம் உயற்கே”         (குறுந்.57)

முற்பிறப்பில்  இருவேமாய்க்  கூடிப்   போந்தனம்,   இவ்வுலகிலே
இப்புணர்ச்சிக்கு முன்னர் யாம் வெவ்வே