|
அன்பு மிகுதியான் தான் மறைந்து அவட் காணுங்கால்
ஆயத்திடையுஞ் சீறூரிடையுங் கண்டு இனிக் கூடுதல் அரிதென இரங்கலும்.
உ-ம்:
“குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டிமுன்துறை
அயிரை ஆரிரைக்கு அணவந் தாஅங்குச்
சேய ளரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே” (குறுந்.128)
“இல்லோ னின்பங் காஅமுற் றாஅங்
கரிதுவேட் டனையால் நெஞ்சே காதலி
நல்ல ளாகுத லறிந்தாங்
கரிய ளாகுத லறியா தோயே” (குறுந்.120)
என வரும்.
‘வழி’ யென்றதனாற் பிரியலுறுவான் கூறுவனவுங் கொள்க.
“வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கு மிடத்து.” (குறள்.1124)
இது மூன்றாங் கூட்டத்தினையுங்கருதலின் ஈண்டுவைத்தார். இது
முதலாகப் பாங்கற்கூட்டமாம். கலங்கலுமெனவே அக்கலக்கத்தான் நிகழ்வனவெல்லாங் கொள்க. அவை தலைவன் பாங்கனை நினைத்தலும் அக் கலக்கங் கொண்டு பாங்கன் வினாவுவனவும் அதுவே பற்றுக்கோடாக உற்றதுரைத்தலும் பிறவுமாம்.
உ-ம்:
“பண்டையை யல்லைநீ யின்று பரிவொன்று
கொண்ட மனத்தை யெனவுணர்வல் - கண்டாயால்
நின்னுற்ற தெல்லாம் அறிய வுரைத்தியால்
பின்னுற்ற நண்பினாய் பேர்த்து.”
எனவும்,
“வஞ்சமே யென்னும் வகைத்தாலோர் மாவினாய்த்
தஞ்சந் தமியனாய்ச் சென்றேனென் - னெஞ்சை
நலங்கொண்டார் பூங்குழலாள் நன்றாயத் தன்றென்
வலங்கொண்டாள் கொண்டா ளிடம்” (திணை.நூற்.9)
எனவும்,
“எலுவ சிறாஅ ரேமுறு நண்ப
புலவர் தோழ கேளாய் அத்தை
மாக்கட னடுவ ணெண்ணாட் பக்கத்துப்
பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்
கதுப்பயல் விளங்குஞ் சிறுநுதல்
புதுக்கோள் யானையிற் பிணித்தற்றால் எம்மே” (குறுந்.129)
எனவும் வரும்.
நிற்பவை நினைஇ நிகழ்பவை உரைப்பினும் - நிற்பவை நினைஇ
உரைப்பினும் நிகழ்பவை உரைப்பினும் என உரைப்பினென்பதனை முன்னுங் கூட்டுக;
அது கேட்ட பாங்கன் உலகத்து நிலைநிற்கின்ற நற்குணங்களை
அவனை நினைப்பித்துக் கழறிக் கூறினும், அக்கழறியவற்றை மறுத்துத் தன் நெஞ்சின் நிகழும் வருத்தங்களை அவற்குக் கூறினும்:
உ-ம்:
“குன்ற முருளிற் கொடித்தேரோய் குன்றியுள்
ஒன்றும் ஒழிவ துளதாமோ - நன்றறிந்து
தாமுறையே செய்வார் தகவிலவே செய்தக்கால்
யார்முறை செய்பவோ மற்று.”
எனவும்,
“தேரோன் தெறுகதிர் மழுங்கினுந் திங்கள்
தீரா வெம்மையொடு திசைநடுக் குறுப்பினும்
பெயராப் பெற்றியின் திரியாச் சீர்சால்
குலத்தில் திரியாக் கொள்கையுங் கொள்கையொடு
நலத்தில் திரியா நாட்டமும் உடையோய்
கண்டத னளவை
|