நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2505
Zoom In NormalZoom Out


 

புணைக் கொள்ளும்
புணைகை விட்டுப் புனலோ டொழுகின்
ஆண்டும் வருகுவள்போலும் மாண்ட
மாரிப் பித்திகத்து நீர்வார் கொழுமுகைச்
செவ்வெரிந் உறழுங் கொழுங்கடை மழைக்கண்
துளிதலைத் தலைஇய தளிரன் னோளே.”      (குறுந்.222)

இது  தலைவி அவட்கு இனையளென்று கருதி அவளை வாயிலாகத்
துணிந்தது.   அன்றித்   தோழி   கூற்றெனின்  தலைவியை  அருமை
கூறினன்றி   இக்குறை   முடிப்பலென  ஏற்றுக்  கொள்ளான்  தனக்கு
ஏதமாமென்று  அஞ்சி;  அன்றியுந்  தானே  குறையு றுகின்றாற்கு இது
கூறிப் பயந்ததூஉ மின்று.

“மருந்தின் தீராது மணியின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே
தான்செய்நோய்க்குத் தான்மருந் தாகிய
தேனிமிர் நறவின் தேறல் போல
நீதர வந்த நிறையழி துயரம்
ஆடுகொடி மருங்குல்நின் அருளின் அல்லது
பிறிதின் தீரா தென்பது பின்நின்று
அறியக் கூறுகம் எழுமோ நெஞ்சே
நாடுவிளங்கு ஒண்புகழ் நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை நிறுத்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர்ப் பாண்டியன்
கொற்கையம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
விளங்குமுத் துறைக்கும் வெண்பல்
பன்மாண் சாயல் பரதவர் மகட்கே.”

என்னுஞ் செய்யுள் இரவு வலியுற்றது.

ஊரும் பெயரும் கெடுதியும் பிறவும் நீரிற் குறிப்பின் நிரம்பக் கூறித்
தோழியைக்  குறையுறும்  பகுதியும்  - தோழியை இரந்துபின்னிற்றலை
வலித்த   தலைவன்,  தலைவியுந்  தோழியும்  ஒருங்கு  தலைப்பெய்த
செவ்வி   பார்த்தாயினுந்,   தோழி   தனித்துழியாயினும்,  நும்பதியும்
பெயரும்    யாவை    யெனவும்    ஈண்டு    யான்    கெடுத்தவை
காட்டுமினெனவும்,   அனையன   பிறவற்றையும்  அகத்தெழுந்ததோர்
இன்னீர்மை  தோன்றும்  இக்கூற்று  வேறொரு  கருதூது உடைத்தென
அவள்   கருதுமாற்றானும்  அமையச்  சொல்லித்,  தோழியைத்  தன்
குறையறிவிக்குங் கூறுபாடும்:

வினாவுவான்  ஏதிலர்போல  ஊரினை முன் வினாய்ச் சிறிது உறவு
தோன்றப்   பெயரினைப்   பின்வினாய்   அவ்விரண்டனும்  மாற்றம்
பெறாதான் ஒன்று கெடுத்தானாகவும் அதனை அவர்கண்டார் போலவும்
கூறினான்.  இவன்  என்னினாயதொரு  குறையுடைய  னென்று அவள்
கருதக்  கூறுமென்பார்  ‘நிரம்ப’ வென்றார். கெடுதியாவன, யானை புலி
முதலியனவும்  நெஞ்சும்  உணர்வும்  இழந்தேன்,  அவை  கண்டீரோ
வெனவும் வினாவுவன பலவுமாம்.

‘பிறவு’ மென்றதனான் வழிவினாதலுந் தன்னோடு அவரிடை  உறவு
தோன்றற்பாலன கூறுதலுங் கொள்க.

உ-ம்:

“அருவி யார்க்கும் பெருவரை நண்ணிக்
கன்றுகால் யாத்த மன்றப் பலவின்
வேர்க்கொண்டு தூங்குங் கொழுஞ்சுளைப் பெரும்பழங்
குழவிச் சேதா மாந்தி யயலது
வேய்பயி லிறும்பின் ஆம்ஊறல் பருகும்
பெருங்கல் வேலிச் சிறுகுடி யாதெனச்
சொல்லவுஞ் சொல்லீ ராயிற் கல்லெனக்
கருவி மாமழை வீழ்ந்தென வெழுந்த
செங்கே ழாடிய செழுங்குரற் சிறுதினைக்
கொய்புனங் காவலும் நுமதோ
கோடேந் தல்குல் நீள்தோ ளீரே.”            (நற்.213)

இஃது ஊரும்பிறவும் வினாயது.

“கல்லுற்ற நோய்வருத்தக் காலு நடையற்றேன்
எல்லுற் றியானும் வருந்தினேன் - வில்லுற்ற
பூங்க ணிமைக்கும் புருவ மதிமுகத்தீர்
ஈங்கிதுவோ நும்முடைய வூர்.”