|
பொருத அன்னிபோல
விளிகுவை கொல்லோ நீயே கிளியெனச்
சிறிய மிழற்றுஞ் செவ்வாய்ப் பெரிய
கயலென அமர்த்த வுண்கட் புயலெனப்
புறந்தாழ் பிருளிய பிறங்குகுரல் ஐம்பால்
மின்னேர் மருங்குல் குறுமகள்
பின்னிலை விடாஅ மடங்கெழு நெஞ்சே” (அகம்.126)
எனவும்,
“மாயத்தில் வாழிய நெஞ்சே நாளும்
மெல்லியற் குறுமகள் நல்லகம் நசைஇ
அரவிரை தேரு மஞ்சுவரு சிறுநெறி
இரவென நீயும் பெறாஅய் அருள்வரப்
புல்லென் கண்ணை புலம்புகொண் டுலகத்
துள்ளவர்க் கெல்லாம் பெருநகை யாகக்
காமம் கைம்மிக வுறுதர
ஆனா வரும்படர் தலைத்தந் தோயே” (அகம்.258:8 - 15)
எனவும் வருவன, தன்னெஞ்சினை இரவு விலக்கியன.
சொல்லவட் சார்த்தலிற் புல்லிய வகையினும் - தான் வருந்திக்
கூறுகின்ற கூற்றினைத் தலைவியைச் சார்த்தித் தலைவன் கூறலின் இவ்வாறு ஆற்றானாய் இங்ஙனங் கூறினானென்று அஞ்சித் தோழி உணராமல் தலைவி தானே கூடிய பகுதியினும்:
‘களஞ் சுட்டுக் கிளவி கிழவிய தாகும்’ (தொல்.பொ.கள.29)
என்பதனான் தலைவியாற் குறிபெற்றுந் தோழியை இரக்கும்.
உ-ம்:
“அயத்துவளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன
நகைப்பொலிந் திலங்கு எயிறுகெழு துவர்வாய்
ஆகத் தரும்பிய முலையள் பணைத்தோள்
மாத்தாட் குவளை மலர்பிணைத் தன்ன
மாயிதழ் மழைக்கண் மாஅ யோளொடு
பேயும் அறியா மறையமை புணர்ச்சி
பூசல் துடியிற் புணர்புபிரிந் திசைப்பக்
கரந்த கரப்பொடு நாஞ்செலற் கருமையின்
கடும்புனன் மலிந்த காவிரிப் பேர்யாற்று
நெடுஞ்சுழி நீத்தம் மண்ணுநள் போல
நடுங்கஞர் தீர முயங்கி நெருநல்
ஆகம் அடைதந் தோளே வென்வேல்
களிறுகெழு தானைப் பொறையன் கொல்லி
ஒளிறுநீர் அடுக்கத்து வியலகம் பொற்பக்
கடவுள் எழுதிய பாவையின்
மடவது மாண்ட மாஅ யோளே” (அகம்.62)
என வரும்.
“அணங்குடைப் பனித்துறைத் தொண்டியன்ன
மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கிடைப்
பொங்கரி பரந்த வுண்க
ணங்கலிழ்மேனி யசைஇய வெமக்கே” (ஐங்குறு.184)
‘வகை’யென்றதனானே இதனின் வேறுபட வருவனவுங் கொள்க.
“தளிர்சேர் தண்டழை தைஇ நுந்தை
குளிர்வாய் வியன்புனத் தெற்பட வருகோ
குறுஞ்சுனைக் குவளை யடைச்சிநாம் புணரிய
நறுந்தண் சாரல் ஆடுகம் வருகோ
இன்சொன் மேவலைப் பட்டவெ னெஞ்சுணக்
கூறினி மடந்தைநின் கூரெயி றுண்
|