நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2518
Zoom In NormalZoom Out


 

கந்தருவமே  என்றற்கு.  இவையும்  ஒருவன்  ஒருத்தி  யெதிர் நின்று
உடம்படுத்த லொப்புமையுடைய. ‘கெடலருஞ் சிறப்’பெனவே முதல் கரு
உரிப்பொருளானுங்     களவென்னுங்     கைகோளானும்     பாங்கி
புணர்த்தலின்மையானும்       இலக்கணங்      குறைப்பட்டவேனுஞ்,
சுட்டியொருவர் பெயர்கொள்ளப்பட்டுக் கற்பியலாகிய இல் வாழ்க்கையும்
பெற்றுவருதற்  சிறப்புடைய  இவையும்,  ஐந்நிலம் பெறு மென்றானாம்.
இது   புலநெறியன்றி   உலகியலாகலின்,   உலகியலாற்  பாலைநிலனும்
ஆண்டு  வாழ்வார்க்கு  மன்றலும்  உளவாகலிற்  பாலையுங் கூறினார்.
எனவே,  ஐம்புலத்து  வாழ்வார்  மணமுஞ்  செய்யுளுட்  பாடியக்கால்
இழுக்கின்றென்றார்.                                       (15)

தலைவிக்குரிய கிளவிகள் இவையெனல்

107 இருவகைக் குறிப்பிழைப் பாகிய விடத்தும்
காணா வகையிற் பொழுதுநனி யிகப்பினும்
தானகம் புகாஅன் பெயர்த லின்மையின்
காட்சி யாசையிற் களம்புக்குக் கலங்கி
வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும்
புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப்
பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும்
வேளா ணெதிரும் விருந்தின் கண்ணும்
வாளா ணெதிரும் பிரிவி னானும்
நாணுநெஞ் சலைப்ப விடுத்தற் கண்ணும்
வரைதல் வேண்டித் தோழி செப்பிய
புரைதீர் கிளவி புல்லிய வெதிரும்
வரைவுடன் படுதலும் ஆங்கதன் புறத்துப்
புரைபட வந்த மறுத்தலொடு தொகைஇக்
கிழவோண் மேன வென்மனார் புலவர்.

இது  மேற் றலைவற்குரிய கிளவிகூறிப், பாங்கனி மித்தம் அவன்கண்
நிகழும்   பகுதியுங்   கூறி,  அம்முறையானே  தலைவிக்குரிய  கிளவி
கூறுகின்றது.

(இ-ள்.) இருவகைக்குறி பிழைப்பு ஆகிய இடத்தும் - இரவுக் குறியும்
பகற்குறியும் பிழைத்தவிடத்தும்:

உ-ம்:

“முழவுமுத லரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்
கருங்கால் அன்றிற் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை யகவும் பானாட் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாரா தாயினும் வருவது போலச்
செவிமுதல் இசைக்கு மரவமொடு
துயிறுறந் தனவால் தோழியென் கண்ணே”     (குறுந்.301)

“கொன்னூர் துஞ்சினும் யாம்துஞ் சலமே
யெம்மி லயல தேழி லும்பர்
மயிலடி யிலைய மாக்குரல் நொச்சி
யணிமிகு மென்கொம் பூழ்த்த
மணிமருள் பூவின் பாடுநனி கேட்டே”        (குறுந்.138)

“ஏறிரங் கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன்
மாறினெ னெனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப
கூடு