நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2525
Zoom In NormalZoom Out


 

நின்னினும் பெரிதே”                        (கலி.74)

“பேரேமுற் றாய்போல முன்னின்று விலக்குவாய்”  (கலி.114)

என்றாற் போல்வன மயக்கம் உணர்த்திற்று.

இனி  நாணும்  மடனுங்கெட்ட   கூற்றுத்   தோழியை   நோக்கிக்
கூறுமென மேற்கூறுகின்றான்.                                (18)

நாணும் மடனும்பெரும்பாலும் நிகழாத கூற்றுத் தலைவி
தோழிக்குக் கூறுமெனல்

110. சொல்லெதிர் மொழிதல் அருமைத் தாகலின்
அல்ல கூற்றுமொழி அவள்வயி னான.

இது  நாணும் மடனும் பெரும்பான்மை நிகழாத கூற்றுத் தோழிக்குத்
தலைவி கூறுமென்கின்றது.

(இ-ள்.)  எதிர்  சொல்  -  அங்ஙனம்  நாணும்  மடனும்  நீங்கிய
சொல்லை;  அவள்  வயின் மொழிதல் அருமைத்து அல்ல ஆகலின் -
தோழி   யிடத்துக்    கூறுதல்  அருமையுடைத்தல்ல  வாகையினானே;
கூற்றுமொழி   ஆன   -   குறிப்பானன்றிக்  கூற்றாற்  கூறும்  மொழி
தலைவிக்குப் பொருந்தின எ-று.

எதிர்தல்   தன்றன்மை   மாறுபடுதல்.   ‘ஒன்றிய  தோழியொடு’
(தொ.பொ.41)
 என   அகத்திணையியற்   கூறுதலானுந்   ‘தாயத்தி
னடையா’   (தொ.பொ.221)
  எனப்  பொருளியலிற்   கூறுதலானும்,
அவள்  வயின்  நாணும்  மடனும்  நீங்கிய   சொல்லைக்   கூறுதலும்
பொருந்து மென்றான்; அவை முற்காட்டிய உதாரணங்களுட்  “கூடுதல்
வேட்கையாற் குறி பார்த்து”  (கலி.46)
 எனவும்.  “வளைமுன்கை
பற்றி நலியத் தெருமந் திட்டு” (கலி.51)
 எனவும்,  “காமநெரிதரக்
கைந்நில் லாதே” (குறுந்.149)
 எனவுங்  கூறிய  வாற்றானும்,  மேற்
கூறுகின்ற   உதாரணங்களானும்,   நாணும்  மடனும்  நீங்கிக்  கூற்று
நிகழ்ந்தவாறுணர்க.

சூத்திரத்துட்பொருளன்றியும்....படுமே’    (தொல்.பொ.மர.103)
என்பதனான்,   இவ்விலக்கணம் பெறுதற்கு, இம்மூன்று சூத்திரத்திற்கும்
மாட்டுறுப்புப்படப் பொருள் கூறினாம்.

இனிக்   கூற்று  நிகழுங்கால்,  நாணும் மடனும் பெண்மையவாதலிற்,
குறிப்பினும்   இடத்தினுமன்றி    வேட்கை   நெறிப்பட  வாராவென்று
பொருள்   கூறிற்,   காட்டிய   உதாரணங்கட்கு   மாறுபாடாகலானுஞ்,
சான்றோர்     செய்யுட்களெல்லாங்     குறிப்பும்      இடனுமன்றிப்
பெரும்பான்மை  கூற்றாய்  வருதலானும், ஆசிரியர்  தலைவன் கூற்றுந்
தலைவி கூற்றுந் தோழிகூற்றுஞ் செவிலி கூற்றுமெனக் கூற்றுஞ் சேர்த்து
நூல்செய்தலானும் அது பொருளன்மையுணர்க.                  (19)

இதுவுந் தலைவிகூற்று நிகழுமாறு கூறல்

111. மறைந்தவற் காண்டல் தற்காட் டுறுதல்
நிறந்தகாதலிற் சொல்லெதிர் மழுங்கல்
வழிபாடு மறுத்தல் மறுத்தெதிர் கோடல்
பழிதீர் முறுவல் சிறிதே தோற்றல்
கைபட்டுக் கலங்கினும் நாணுமிக வரினும்
இட்டுப்பிரி விரங்கினும் அருமைசெய் தயர்ப்பினும்
வந்தவழி யெள்ளினும் விட்டுயிர்த் தழுங்கினும்
நொந்துதெளி வொழிப்பினும் அச்சம் நீடினும்
பிரிந்தவழிக் கலங்கினும் பெற்றவழி மலியினும்
வருந்தொழிற் கருமை வாயில் கூறினும்
கூறிய வாயில் கொள்ளாக் காலையும்
மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் தோழிக்கு
நினைத்தல் சான்ற அருமறை யுயிர்த்தலும்
உயிராக் காலத் துயிர்த்தலும் உயிர்செல
வேற்றுவரைவு வரினது மாற்றுதற் கண்ணும்
நெறிபடுநாட்டத்து நிகழ்ந்தவை மறைப்பினும்
பொறியின் யாத்த