|
நும்மில் புலம்பான் வாடைக்கு வருந்தினே மென்றலின் இரண்டுங்
கூறினாள்.
“அம்ம வாழி தோழி நலமிக
நல்ல வாயின அளியமென் றோள்கள்
மல்ல லிருங்கழி மல்கும்
மெல்லம் புலம்பன் வந்த மாறே.” (ஐங்குறு.120)
“அம்ம வாழி தோழி பன்மாண்
நுண்மண லடைகரை நம்மோ டாடிய
தண்ணந் துறைவன் மறைஇ
அன்னை யருங்கடி வந்துநின் றோனே” (ஐங்குறு.115)
இவை தோழிக்குக்கூறியன. ‘பெற்றவழி மலியினும்’ எனப் பெறு பொருள் இன்னதெனவும் இன்னார்க்குக் கூறுவதெனவும் வரையாது கூறவே, பிற பெற்று மலிந்து பிறர்க்குக் கூறுவனவுங் கொள்க.
“அம்ம வாழி தோழி யன்னைக்
குயர்நிலை யுலகமுஞ் சிறிதால் அவர்மலை
மாலைப் பெய்த மணங்கம ழுந்தியொடு
காலைவந்த முழுமுதல் காந்தள்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோட்கே.” (குறுந்.361)
இது பெற்றவழி மகிழ்ந்து தோழிக்கு உரைத்தது. இதற்கும் இரண்டுங் கூறினாள்.
வரும் தொழிற்கு அருமை வாயில் கூறினும் - தலைவன் இடைவிடாது வருதற்கு, ஆண்டு நிகழும் ஏதம் பலவாற்றானும் உளதாம் அருமையை, வாயிலாகிய தோழி கூறினுந் தலைவிக்குக் கூற்று நிகழ்தலுள;
அது,
“நள்ளென் றன்றே யாமம் சொல்லவிந்து
இனிதடங் கினரே மாக்கண் முனிவின்று
நனந்தலை யுலகமும் துஞ்சும்
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.” (குறுந்.6)
இதனுட் பொழுது சென்றதில்லையென்றும், மாக்கள் இன்னுந் துயின்றிலரென்றும் அருமையை வாயில் கூறியவழித், தலைவி யாமமும் நள்ளென்றும் மாக்களுந் துயின்றும் வந்திலரென வருந்திக் கூறியவாறு காண்க.
நாம் ஏவிய தொழில் ஏற்றுக்கொண்டு வருகின்றவன், ஒரு காரணத்தானன்றி வாராதொழியுமோ வென்று தலைவி கொள்ளுமாறு கூறுமென்றற்குத் தொழிலென்றார்.
கூறிய வாயில் கொள்ளாக் காலையும் - தலைவற்குக் குறை நேர்ந்து வாயிலாகிக் குறைநயப்பக் கூறியவழியும் பிறவழியுந், தோழி கூற்றினைத் தலைவி ஏற்றுக்கொள்ளாத காலத்துக்கண்ணும்: வாயில், தோழி.
உ-ம்:
“தெருவின்கட், காரணமின்றிக் கலங்குவார்க் கண்டுநீ
வாரண வாசிப் பதம்பெயர்த்தல் ஏதில
நீநின்மேற் கொள்வ தெவன்” (கலி.60)
எனத் தோழி கூற்றினை மறுத்தது.
“தோளே தொடி நெகிழ்ந் தனவே கண்ணே
வாளீர் வடியின் வடிவிழந் தனவே
நுதலும் பசலை பாயின்று திதலைச்
சில்பொறி அணிந்த பல்கா ழல்குன்
மணியே ரைம்பான் மாயோட் கென்று
வெவ்வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற
நாமுறு துயரஞ் செய்யல ரென்னுங்
காமுறு தோழி காதலங் கிளவி
யிரும்பு செய் கொல்லன் வெவ்வுலைத் தெளித்த
தோய்மடற் சின்னீர் போல
நோய்மலி நெஞ்சிற்கு ஏம
|