நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2533
Zoom In NormalZoom Out


 

மாஞ் சிறிதே.”                            (நற்.133)

இது தோழி கூற்றினை நன்கு மதியாது கூறினாள்.

மனைப்பட்டுக்  கலங்கிச்  சிதைந்தவழித்   தோழிக்கு  நினைத்தல்
சான்ற அருமறை உயிர்த்தலும் - காப்பு மிகுதிக்கண்  மனையகப்பட்டுக்
கலங்கி   உணர்வு   அழிந்தவழித்,  தலைவி  ஆராய்ச்சியுடைத்தாகிய
அருமறையினைத் தோழிக்குக் கூறுதலும் உள.

உ-ம்:

“கேளா யெல்ல தோழி யல்கல்
வேணவா நலிய வெய்ய வுயிரா
ஏமான் பிணையின் வருந்தினெ னாகத்
துயர்மருங் கறின்தனள் போல அன்னை
துஞ்சா யோஎன் குறுமக ளென்றலின்
சொல்வெளிப் படாமை மெல்லவென் நெஞ்சிற்
படுமழை பொழிந்த பாறை மருங்கின்
சிரல்வா யுற்ற தளவிற் பரலவற்
கான்கெழு நாடற் படர்ந்தோர்க்குக்
கண்ணும் படுமோ வென்றிசின் யானே.”          (நற்.61)

இதனுள்   துஞ்சாயோவெனத்   தாய்   கூறியவழி,  மனைப்பட்டுக்
கலங்கியவாறும்,  படர்ந்தோர்க்கென  மறையுயிர்த்தவாறுங், கண் படாக்
கொடுமை செய்தானெனப் பரத்தைமை கூறியவாறுங் காண்க.

“பொழுது மெல்லின்று பெயலு மோவாது
கழுதுகண் பனிப்ப வீசு மதன்றலைப்
புலிப்பற் றாலிப் புதல்வற் புல்லி
அன்னா யென்னு மன்னையு மன்னோ
என்மலைந் தனன்கொ றானே தன்மலை
ஆர நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே”          (குறுந்.161)

“பலவின் பழம்பெற்ற பைங்கட் கடுவன்
எலவென் றிணைபயிரும் ஏகல்சூழ் வெற்பன்
புலவுங்கொல் தோழி புணர்வறிந் தன்னை
செலவுங் கடிந்தாள் புனத்து.”            (திணை ஐம்.10)

இவையும்  அது. இன்னும்  ‘மனைப்பட்டுக்  கலங்கி’  யென்றதனாற்
காப்புச் சிறைமிக்க கையறு கிளவிகளுங் கொள்க.

“சிறுவெள்ளாங் குருகே சிறுவெள்ளாங் குருகே
துறைபோ கறுவைத் தூமடி யன்ன
நிறங்கிளர் தூவிச் சிறுவெள்ளாங் குருகே
எம்மூர் வந்தெம் ஒண்டுறைத் துழைஇச்
சினைக்கெளிற் றார்கையை யவரூர்ப் பெயர்தி
அனையவன் பினையோ பெருமற வியையோ
ஆங்கட் டீம்புனல் ஈங்கட் பரக்கும்
கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே.”         (நற்.70)

“கூர்வாய்ச் சிறுகுருகே குண்டுநீ ருட்கிடந்த
ஆர லிரைகருதி நித்தலு நிற்றியால்
நேரிணர்ப் புன்னைக்கீழ்க் கொண்கன் வருமெனப்
பேருண்க ணீர்மல்க நின்றாண்மற் றென்னாயோ.”

“ஒண்டூவி நாராய்நின் சேவலு நீயுமாய்
வண்டூது பூங்கானல் வைகலுஞ் சேறிரால்
பெண்டூது வந்தே மெனவுரைத்தெங் காதலரைக்
கண்டீர் கழறியக்கால் கானல் கடிபவோ.”

இவை காப்புச் சிறைமிக்க கையறுகிளவி.

உயிராக்   காலத்து   உயிர்த்தலும்  -  தலைவனொடு  தன்றிறத்து
ஒருவரும்  ஒன்ற  உரையாதவழித்,  தனதாற்றாமையான்,  தன்னோடும்
அவனோடும் பட்டன சில மாற்றந் தலைவி தானே கூறுதலும் உள:

தோழி  மறைவெளிப்படுத்துக்   கோடற்கு   வாளாது  இருந்துழித்,
தலைவன்   தன்மேல்   தவறிழைத்தவழி,   இரண்டும்படக்  கேட்போ
ரின்றியுங் கூறுதலாம்.

உ-ம்:

“உறைபதி யன்றித் துறைகெழு சிறுகுடிக்
கானலஞ் சேர்ப்பன் கொடுமை யெற்றி

ஆனாத் துயரமொடு