|
எஞ்ஞான்றும் இடையீடு படாமற் றலைவன் வந்து கூடுதல்,
இன்பத்திற்குப் பாதுகாவல் அமைந்த உவகையினைத் தலைவி
எய்தியக்கண்ணும்:
அஃது எஞ்ஞான்றுங் கூட்டம் பெற்றமையான் மகிழ்ந்து கூறுதலாம்.
உ-ம்:
“நோயலைக் கலங்கிய மதனழி பொழுதில்
காமஞ் செப்பல் ஆண்மகற் கமையும்
யானென், பெண்ம தட்ப நுண்ணிதிற் றாங்கிக்
கைவல் கம்மியன் கவின்பெறக் கழாஅ
மண்ணாப் பசுமுத் தேய்ப்பக் குவியிணர்ப்
புன்னை அரும்பிய புலவுநீர்ச் சேர்ப்பன்
என்ன மகன்கொல் தோழி தன்வயின்
ஆர்வ முடைய ராகிய
மார்பணங்குறுநரை யறியா தோனே.” (நற்.94)
‘மண்ணாப் பசுமுத்தேய்ப்ப நுண்ணிதிற்றாங்கிப் பெண்மை தட்ப’
வென மாறிக் கழுவாத பசிய முத்தந் தனது மிக்க ஒளியை மறைத்துக்
காட்டினாற்பேல், யாமும் புணர்ச்சியான் நிகழ்ந்த மிக்க நலனைப்
புலப்படாமல் அரிதாகத் தாங்கிப், பெண்மையாற் றகைத்துக் கொள்ளும்
படியாகத், தன் மார்பான் வருத்தமுற்றாரைக் கண்டு அறியாதோனாகிய
சேர்ப்பனை என்ன மகனென்று சொல்லப்படுமென மகிழ்ந்து கூறினாள்.
ஆர்வமுடையராக வேண்டி மார்பணங்குறுநரை அறியாதோனென்க.
அலராமற் குவிந்த கொத்தையுடைய புன்னைக் கண்ணே
புலானாற்றத்தையுடைய நீர் தெறித்தரும்பிய சேர்ப்பனென்றதனான்,
புன்னையிடத்துத் தோன்றிய புலானாற்த்தைப் பூவிரிந்து
கெடுக்குமாறுபோல, வரைந்து கொண்டு களவின்கண் வந்த குற்றம்
வழி கெட ஒழுகுவனென்பது உள்ளுறை. “இரண்டறி கள்வி”
(குறுந்.312) என்னும் பாட்டினுள் தோற்றப் பொலிவை மறைப்பளெனத்
தலைவன் கூறியவாறும் உணர்க.
மறைந்தவற் காண்டன் முதலிய ஆறற்கும் உம்மையும் உருபும்
விரித்து, ஏனையவற்றிற்கு உம்மை விரிக்க; உம்மை
விரிக்கவேண்டுவனவற்றிற்கு உம்மையும், இரண்டும் விரிக்க
வேண்டுவனவற்றிற்கு இரண்டும் விரித்து, அவற்றிற்கும் ஏனை
வினையெச்சங்கட்கும் கூற்று நிகழ்தலுளவென முடிக்க. கூற்று
அதிகாரத்தான் வரும். உயிராக்காலத்து உயிர்த்தலு முளவென முடிக்க.
ஓரிடத்தான தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும்
உள-இக்கூற்று முப்பத்தாறனுள் ஒரோவிடங்களிலே தன்னிடத்து
அன்பிற்கு உரிமையுண்டாகவும் அவனிடத்து அயன்மை உண்டாகவுங்
கூற்று நிகழ்தலுள:
ஆன் ஆனவென ஈறு திரிந்தது
அன்னவும் உள - அவைபோல்வன பிறவும் உள என்றவாறு.
‘அன்னபிற’ வென்றதனான் இன்னுந் தலவிகூற்றாய் இவற்றின்
வேறுபட வருவனவெல்லாம் இதனான் அமைக்க.
“பிணிநிறந் தீர்ந்து பெரும்பணைத்தோள் வீங்க
அணிமலை நாடன் வருவான்கொல் தோழி
கணிநிற வேங்கை கமழ்ந்துவண் டார்க்கும்
மணிநிற மாலைப்
|