நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2547
Zoom In NormalZoom Out


 

சிறந் தன்றெனத்
தொல்லோர் கிளவி புல்லிய நெஞ்சமொடு
காமக் கிழவ னுள்வழிப் படினுந்
தாவில் நன்மொழி கிழவி கிளப்பினும்
ஆவகை பிறவுந் தோன்றுமன் பொருளே.

இது    தலைவி   கூற்றிற்குச்  சிறப்பில்லன   கூறி    அவையும்
அகப்பொருளாம் என்கின்றது.

(இ-ள்.)     உயிரினும் நாண் சிறந்தன்று - எல்லாவற்றினுஞ் சிறந்த
உயிரினும்   மகளிர்க்கு   நாண்   சிறந்தது;   நாணினுஞ்   செயிர்தீர்
கற்புக்காட்சி   சிறந்தன்று  -  அந்நாணினுங்  குற்றந்தீர்ந்த  கற்பினை
நன்றென்று  மனத்தாற்  காணுதல்  சிறந்தது; எனத் தொல்லோர் கிளவி
புல்லிய  நெஞ்சமொடு  -  என்று   முன்னுள்ளோர் கூறிய கூற்றினைப்
பொருந்திய   நெஞ்சுடனே;    காமக்கிழவன்   உள்வழிப்  படினும்  -
தலைவன்   இருந்தவிடத்தே   தலைவி  தானே  செல்லினும்;  தாவில்
நன்மொழி கிழவி கிளப்பினும் - மனவலியின்றிச் செல்வாமெனக் கூறும்
நன்மொழியினைத்  தலைவிதானே  கூறினும்;  பொருள்  தோன்றும் -
அவை  அகப்பொருளாய்த்  தோன்றும்; ஆவகை பிறவும்மன் பொருள்
தோன்றும்  -  அக்கூற்றின்  கூறுபாட்டிலே பிற கூற்றுக்களும் மிகவும்
அகப்பொருளாய்த் தோன்றும் எ-று.

என்றது    தலைவிகூற்று. சிறுபான்மை வேறுபட்டு வருவனவற்றைக்
கற்புச்சிறப்ப      நாண்     துறந்தாலுங்குற்றம்      இன்றென்றற்குச்
‘செயிர்தீ’ரென்றார்;   ‘நன்மொழி’   யென்றார்  கற்பிற்  றிரியாமையின்;
அவை  இன்னோரன்னவழி  நெஞ்சொடுகிளத்தல்  போல்வன.  இவள்
கூற்றுத்  தோழிக்குந்  தலைவற்குமே தோன்றுவதென்க. மன்: ஆக்கம்,
இழிந்த பொருளும் உயரத்தோன்றலின்,

“மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டுங்காணேன் மாண்தக் கோனை
யானுமோ ராடுகள மகளே யென்கைக்
கோடீர் இலங்குவளை ஞெகிழ்த்த
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே.”         (குறுந்.31)

யாண்டுங்     காணேனென அவனை    வழிபட்டுக் கூறினமையிற்
கற்பின்பாலதாய்த்  தோழியுந்  தலைவனும்  பெண்டன்மை  யிற்றிரியக்
கருதாது நன்குமதித்தவாறு காண்க.

“அருங்கடி யன்னை காவ னீவிப்
பெருங்கடை யிறந்து மன்றம் போகிப்
பகலே பலருங் காண நாண்விட்
டகல்வயற் படப்பை அவனூர் வினவிச்
சென்மோ வாழி தோழி பன்னாள்
கருவி வானம் பெய்யா தாயினும்
அருவி யார்க்கும் அயந்திகழ் சிலம்பின்
வான்றோய் மாமலை நாடனைச்
சான்றோ யல்லை யென்றனம் வரற்கே.”         (நற்.365)

“கோடீ ரிலங்குவளை ஞெகிழ நாடொறும்
பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
யீங்கிவ ணுறைதலும் உய்குவ மாங்கே
எழுவினி வாழியென் நெஞ்சே முனாஅது
குல்லைக் கண்ணி வடுகர் முனையது
வல்வேற் கட்டி நான்னாட் டும்பர்
மொழிபெயர் தேஎத்த ராயினும்
வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நட்பே.”       (குறுந்.11)

இவை தோழிக்கும் நெஞ்சிற்குங் கூறியன.

“ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த