|
சான்றோர் செய்யுளுட் பலருங் கூறியவாறு காண்க.
(33)
சிறப்புடைத் தோழியாவாள் இவளெனல்
125. தோழி தானே செவிலி மகளே.
இது தோழியது சிறப்புணர்த்துகின்றது.
(இ-ள்.)
தோழி தானே - தோழியர் பலருள்ளும் ஒருத்தியெனப் பிரிக்கப்படுவாள்; செவிலி மகளே - முற்கூறிய
செவிலியுடைய மகள்
எ-று.
இதற்கும் அருமறை கிளத்தல் - அதிகாரத்தாற் கொள்க. தாய்த் தாய்க் கொண்டு வருகின்றமையின் உழுவலன்பு போல்வதோர் அன்பு உடையர் இருவருமென்று கொள்க. இதனானே களவிற்குத் தோழியே சிறந்தாளாயிற்று; அது சான்றோர் செய்யுளுட் காண்க.
(34)
தோழி சூழ்தற்குமுரியளெனல்
126. சூழ்தலு முசாத்துணை நிலைமையிற் பொலிமே.
இதுவுந் தோழி சிறப்பினையே கூறுகின்றது.
(இ-ள்.) உசாத்துணை நிலைமையின் - தலைமகனுந்
தலை மகளும் உசாவுதற்குத் துணைமைசான்ற நிலைமையினாலே;
சூழ்தலும் பொலிமே - புணர்ச்சி
யுண்மையை ஏழுவகையானுஞ் சூழ்தற்கண்ணும் பொலிவுபெறும் எ-று.
எனவே, இம்மூன்று நிலைக்குந் தோழி உரியள் என்றார். உதாரணம்
முற்காட்டியவற்றுட் காண்க.
(35)
தோழி சூழ்ச்சி இத்துணைப்பகுதியெனல்
127. குறையுற உணர்தல் முன்னுற உணர்தல்
இருவரு முள்வழி அவன்வர உணர்தலென
மதியுடம் படுத்தல் ஒருமூ வகைத்தே.
இஃது, அத்தோழி சூழ்ச்சி இத்துணைப் பகுதித்து என்கின்றது.
(இ-ள்.)
குறையுற உணர்தல் - தலைவன் தோழியை இரந்து குறையுற்றவழி உணர்தல்; முன் உற உணர்தல். முன்னம் மிக உணர்தல்; இருவரும் உள்வழி அவன் வர உணர்தல் - தலைவியுந் தோழியும் ஒருங்கிருந்தவழித் தலைவன் வருதலான் தலைவன் குறிப்புந் தலைவி குறிப்புங் கண்டுணர்தல்; என மதியுடம்படுத்தல் ஒரு மூவகைத்தே - என்று இருவர் கருத்தினையுந் தன் கருத்தினோடு
ஒன்றுபடுத்துணர்தல் ஒரு மூன்று கூற்றினையுடைத்து எ-று.
எண்ணுதல் எண்ணென்றாற்போல முன்னுதல் ‘முன்’னென நின்றது. உயிர்கலந்தொன்றலிற் குறிப்பின்றியும் பாகமுணர்வாள் குறிப்புப் பெற்றுழி மிகவுணரும் என்று கொள்க. இது மூவர் மதியினையும் ஒன்று படுத்துதலின் மதியுடம்படுத்த லென்று பெயராயிற்று. இம்மூன்றுங் கூடிய பின்னரல்லது மதியுடம்படுத்த லின்றென்றற்கு மூவகைத்தென்று ஒருமையாற் கூறினார். ‘முன்னுற’வென்றதனை
|